பாதியில் சிக்கிய தங்க மோதிரம்.. வளைந்து நெளிந்த நீல பாம்பு! கடைசியில் நடந்த டிவிஸ்ட்!
திருவனந்தபுரம்: மலப்புரம் மாவட்டம் காசர்கோடு அருகே ஒரு பாம்பின் உடலில் தங்க மோதிரம் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து கேரள மக்கள் செய்த செயல் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
இன்றைய தேதியில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15,382. நம்மூர் மக்கள் இந்த பாம்பை பார்த்திருந்தால் அதை வெட்டி, மோதிரத்தை எடுத்து சென்றிருப்பார்கள். ஆனால், கேரளாவில் மக்கள் சிவிக் சென்ஸுடன் நடந்துக்கொண்டிருக்கிறார்கள்.

என்ன நடந்தது?
காசர்கோடு மாவட்டம் பேடட்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேஜை டிராயருக்குள் ஒரு பாம்பு புகுந்துள்ளது. அந்தப் பாம்பின் உடலில் ஒரு தங்க மோதிரம் இறுக்கமாகச் சிக்கியிருப்பதை அந்த வீட்டார் கவனித்தனர். இது குறித்து உடனடியாக வனவிலங்கு மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி அந்த மோதிரத்தை பாம்பின் உடலிலிருந்து மீட்டு, பாம்பை விடுவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் 2 வகைகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
விழிப்புணர்வுடன் செயல்பட்ட மக்கள்
ஒன்று வன உயிரினங்கள் குறித்து கேரள மக்கள் எந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பது. ஏனெனில், இதே கேரளாவில்தான் காட்டு யானையை சிலர் பழத்தில் வெடி வைத்து கொலை செய்திருந்தனர். அதேபோல உணவு தேடி வந்த பழங்குடி இளைஞனை கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி அடித்து கொலை செய்திருந்தனர். இதெல்லாம் அம்மக்களுக்கு பாடமாக அமைந்திருக்கிறது. எனவேதான் தற்போது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டிருக்கிறார்கள்.
காசர்கோடு பகுதியில் சிக்கியது விஷமில்லாத தண்ணீர் பாம்பு. தங்கம் விற்கிற விலைக்கு, நிச்சயம் நம்மூர் மக்கள் பாம்பை கொன்று மோதிரத்தை எடுத்திருப்பார்கள். ஆனால், பாம்பின் நிலைமையை பார்த்தவுடன் உடனடியாக வனத்துறைக்கு போன் செய்ய வேண்டும் என்று தோன்றியதே பெரிய விஷயம்.
தங்கமா? உயிரா?
ஏனெனில், பாம்பின் உடலில் சிக்கியது வேறு ஒருவரின் மோதிரம். பாம்பு சிறியதாக இருக்கும்போது தெரியாமல் இதன் வயிற்றில் மோதிரம் சிக்கியிருக்கிறது. அது வளர, வளர, மோதிரம் நன்றாக மாட்டிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், இந்த உலகத்தில் ஒரு உயிரை விட தங்கமும், பணமும் பெரிய விஷயமல்ல என்பதை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஏன் பாம்புகள் முக்கியம்?
பாம்புகள் நமது சூழலியலுக்கு மிகவும் முக்கியமான உயிரினங்கள். விவசாயிகளுக்கு பாம்புகள்தான் உற்ற தோழன். எலிகளை கட்டுப்படுத்துவதில் பாம்புகள் கில்லாடிகள். ஒருவேளை பாம்புகள் இனம் குறைந்துவிட்டால், எலிகள் உட்பட சிறிய பூச்சிகள், பல்லிகளின் தொல்லை அதிகமாகிவிடும். இதையெல்லாம் உணர்ந்தவரால்தான் உடனடியாக பாம்பின் நிலைமையை பார்த்து வனத்துறையினருக்கு போன் செய்திருக்க முடியும். அந்த வகையில் கேரள மக்களின் சிவிக் சென்ஸ் பாரட்டலாம்.
வனத்துறையினரின் நடவடிக்கை
இரண்டாவது விஷயம், வனத்துறையினரின் செயல்பாடு. வனத்துறை இந்த விஷயத்தை சாதூர்யமாக கையாண்டு இருக்கிறது. அதாவது, பாம்பு ஏற்கெனவே காயமடைந்திருப்பதை அதிகாரிகள் கவனத்திருக்கிறார்கள். எனவே தேங்காய் எண்ணெய் போட்டு மோதிரத்தை உருவி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், லாவகமாக பாம்பை பிடித்து, மோதிரத்தை வெட்டி எடுத்திருக்கிறார்கள்.
பின்னர், காயமடைந்த பாம்புக்கு முதலுதவி செய்து, அதை வனப்பகுதிக்குள் விட்டிருக்கிறார்கள். அந்த வகையில் வனத்துறையினரின் நடவடிக்கையும் பாராட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications