கேரள ஓணம் பம்பர் லாட்டரி.. ரூ.25 கோடி மட்டுமல்ல.. அடுத்தடுத்த பரிசும் ஜாக்பாட் தான்! குலுக்கல் எப்போது?
திருவனந்தபுரம்: கேரளாவில் மான்சூன் பம்பர் லாட்டரி குலுக்கல் அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது. ஓணம் பம்பர் லாட்டரியை பொறுத்தவரை மொத்தமாக 125.4 கோடிக்கு பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது. இதில் முதல் பரிசு மட்டும் ரூ. 25 கோடி ஆகும். இதேபோன்று 2 ஆம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. பரிசுத் தொகை எவ்வளவு? எப்போது குலுக்கல் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. அங்கு தினம்தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. தினமும் ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும்.

ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை
அதுபோக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்று முடிந்த நிலையில், ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பம்பர் லாட்டரியாக ஓணம் உள்ளது. ஏனெனில் இதற்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்படுகிறது.
முதல் பரிசு அடித்தால் வாழ்நாளில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு திருப்பம் ஏற்பட்டு விடும் என்று பகல் கனவு காணும் லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டினை போட்டி போட்டு வாங்குவதை பார்க்க முடிகிறது. ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். ஓணம் பம்பர் லாட்டரியை பொறுத்தவரை மொத்தமாக 125.4 கோடிக்கு பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.
20 பேருக்கு ரூ. 1 கோடி பரிசு
அதன்படி பார்த்தால் முதல் பரிசு போக அடுத்தடுத்த பரிசுகளும் பம்பர் பரிசாகத்தான் உள்ளது. அதாவது இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி 20 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக தலா ரூ. 50 லட்சம் 20 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படும். 4-வது பரிசாக ரூ.5 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
5-வது பரிசாக ரூ.2 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. மொத்த பரிசுத்தொகை ரூ.20 லட்சம் ஆகும். 6-வது பரிசாக ரூ.5 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இதன் மொத்த பரிசுத்தொகை ரூ.27,00,00,000/ ஆகும். கடைசி 4 இலக்கங்களுக்கு இந்த பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது. டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ள நிலையில், கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் இந்த டிக்கெட் விற்பனை அனல் பறக்கிறது.
90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்படுகிறது
வழக்கம் போல பாலக்காட்டில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் லாட்டரி பிரியர்கள் வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகளை அச்சிட கேரள லாட்டரித்துறை முடிவு செய்துள்ளது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் 27.09.2025 (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
குலுக்கலுக்கு இன்னும் சுமார் 2 மாதங்கள் இருக்கக் கூடிய நிலையில் லாட்டரி விற்பனை தற்போதே களை கட்டியுள்ளது. முதல் பரிசுத்தொகை ரு.25 கோடி அடிப்பவர்களுக்கு ஏஜெண்ட் கமிஷன், வரிப்பிடித்தம் போக சுமார் 15 கோடி ரூபாய் கையில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. லாட்டரி விற்பனை மூலம் கேரள அரசுக்கு சுமார் 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று தெரிகிறது.
குறிப்பு:
லாட்டரி விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த செய்தி வெளியிடப்படவில்லை. ஒரு தகவலாக மட்டுமே வெளியிடப்படுகிறது. லாட்டரிகளுக்கு தமிழகத்தில் தடை உள்ளது. எனவே, கேரளா உள்பட எந்த ஒரு மாநில லாட்டரி டிக்கெட்டுகளையும் தமிழகத்தில் விற்பனை செய்வது சட்ட விரோத செயல் ஆகும்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் போலீசார் சட்டப்படி கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பார்கள். கள்ளச்சந்தையில் விற்பனையாகும் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு கேரள அரசும் பரிசுத்தொகை மறுக்க விதிகள் உள்ளன.












Click it and Unblock the Notifications