விஷூ பம்பர் லாட்டரி.. முதல் பரிசில் நடந்த ட்விஸ்ட்.. பாலக்காடு அல்ல! 12 கோடி விழுந்த இடம் இதுதான்
திருவனந்தபுரம்: கேரளாவில் விஷூ பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று நடந்த நிலையில் முதல் பரிசுத் தொகை ரூ.12 கோடியானது பாலக்காட்டில் வாங்கிய டிக்கெட்டிற்கு விழுந்தது என்று பரவலாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது கோழிக்கோட்டில் வாங்கிய சீட்டுக்கு தான் முதல் பரிசு விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. ரூ.12 கோடியை தட்டிச் செல்லும் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என கேரள சேட்டன்ஸ் எதிர்பார்த்து உள்ளனர்.
கேரளாவில் விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நேற்று நடைபெற்றது. ரூ.300 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி அளிக்கப்படும். கேரள லாட்டரி பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டிக்கெட்டின் குலுக்கல் நேற்று நடைபெற்றதில் முதல் பரிசு VD 204266 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது.

பாலக்காடு இல்லை
முதல் பரிசு விழுந்த டிக்கெட் தமிழக எல்லையோர மாவட்டமான பாலக்காட்டில் உள்ள ஏஜென்சியிடம் விற்கப்பட்டது என முதலில் தகவல் வெளியானது. கேரளாவில் லாட்டரி துறையும் முதலில் தனது நேரலை ஒளிபரப்பில் ஏஜென்சி நம்பருடன் பாலக்காட்டில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி என்று கூறியிருந்தது. இதை வைத்து கேரள ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
பாலக்காடு தமிழகத்தின் எல்லையோர மாவட்டம் என்பதால், தமிழகத்தை சேர்ந்த யாருக்கேனும் பரிசு விழுந்து இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனெனில், கோவை மாவட்டத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பாலக்காடு பகுதிகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக தமிழர்கள் சென்று வருவது வழக்கம். இதனால், பாலக்காடு செல்லும் லாட்டரி பிரியர்கள் யாருக்கேனும் அடித்து இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
கோழிக்கோட்டில் முதல் பரிசு
கடந்த சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் முதல் பரிசாக ரூ.10 கோடி பாலக்காடு மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு விழுந்தது. இதனால் இந்த முறையும் முதல் பரிசு பாலக்காடில் வாங்கப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது கோழிக்கோடு மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் என்று தெரியவந்துள்ளது. டிகேஎஸ் லாட்டரி ஏஜென்சியில் விற்கப்பட்ட இந்த லாட்டரிக்குதான் முதல் பரிசாக ரூ.12 கோடி அடித்துள்ளது.
முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யார் என்ற விவரம் தற்போது வரை தெரியவில்லை. ஒரே நாளில் வாழ்க்கையே மாறி போன அந்த அதிர்ஷ்டசாலி யார் என தெரிந்து கொள்ள கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். முதல் பரிசாக ரூ.12 கோடி அடித்தவருக்கு முழு தொகையும் கிடைக்காது. கமிஷன் மற்றும் வரி பிடித்தம் போக 63 சதவீத தொகை மட்டுமே பரிசுத்தொகையாக அவரது கையில் கிடைக்கும்.
யார் அந்த அதிர்ஷ்டசாலி?
லாட்டரியில் பரிசு வென்றவர்கள் சில நேரங்களில் ரகசியமாக லாட்டரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பரிசுத்தொகையை பெறுவதை பார்க்க முடிகிறது. எனவே, லாட்டரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி பரிசுத்தொகையை பெற உரிமை கோரியிருக்கிறாரா? என்ற பேச்சும் லாட்டரி பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சம்மர் விடுமுறைக்கு கேரளாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்று வந்ததால் வெளி மாநிலத்தவர்கள் யாருக்கேனும் விழுந்து இருக்கலாம் என்ற பேச்சும் கூட உள்ளது. எது எப்படியோ இன்னும் ஓரிரு தினங்களில் பரிசு விழுந்தது யாருக்கு என்ற விவரம் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளி மாநிலத்தவருக்கு பரிசு அடித்தால்
கேரள லாட்டரிகளை வெளி மாநிலத்தவர்களுக்கு பரிசு அடித்தால் கேரளாவில் டிக்கெட் வாங்கியதை உறுதி செய்ய வேண்டும். பரிசுகளை உரிமை கோரும் போது கேரளாவில் வந்ததற்கான காரணம், வாங்கியதற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை உறுதி செய்த பிறகே பரிசுத்தொகை வழங்கப்படும் என்று கேரள லாட்டரி துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கியிருந்தால் அதற்கு பரிசுத்தொகை வழங்க கேரள அரசு மறுக்கும்.












Click it and Unblock the Notifications