சபரிமலையில் நாளை மண்டலபூஜை- நடை சாத்தப்பட்டு டிச. 30-ல் மீண்டும் திறப்பு
பம்பை: சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்ட நிலையில் நாளை மண்டலபூஜை நடைபெறுகிறது. இதனையடுத்து நடை சாத்தப்பட்டு மீண்டும் டிச.30-ல் மகரவிளக்கு பூஜைகளுக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர பூஜைகளுக்காக பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மண்டலபூஜையின் முக்கிய நிகழ்வாக ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது.

முன்னதாக ஆரன்முலாவில் இருந்து புறப்பட்ட தங்கி அங்கி ஊர்வலம், வெள்ளிக்கிழமையன்று பம்பையை வந்தடைந்தது. பம்பையில் இருந்து தலைசுமையாக தங்க அங்கி சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை மண்டல பூஜைகள் நடைபெறுகின்றன. மண்டலபூஜைகள் நிறைவடைந்த பின்னர் கோவில் நடை சாத்தப்படும்.
இதன்பின்னர் ஜனவரி 14-ல் நடைபெறும் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30-ந் தேதி ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதனிடையே ஐயப்பன் கோவிலில் நாள்தோறும் 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கேரளா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான கேரளா அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications