40 நாள் குழந்தை, மகனை நிலச்சரிவில் இருந்து காப்பாற்றிய தாய்.. தாய், பாட்டியை கண்முன்னே பறிகொடுத்தார்
வயநாடு: கேரள மாநிலம், வயநாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தும், பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவில் இருந்து 40 நாள்களே ஆன குழந்தை மற்றும் 6 வயது மகனை பெண் போராடி மீட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பேய் மழை கடந்த 30ம் தேதி கொட்டித் தீர்த்தது. அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலமும், சடலங்களுமே தென்படுகின்றன.

தொடர்ந்து, இன்று 4வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 310க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வீடு, பொருள்கள், உறவினர்கள் என அனைத்தையும் இழந்து என்ன செய்வதென்றே தெரியாமல் அப்பகுதி மக்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், பிறந்து 40 நாட்களே ஆன தனது குழந்தை மற்றும் 6 வயது மகனை நிலச்சரிவில் இருந்து போராடி காப்பாற்றிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 நாள்களாக கடும் மீட்புப் பணியில் மன அழுத்தத்தில் இருந்த மீட்புப் படை வீரர்களுக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் தாயை மீட்கப்பட்டிருப்பது சற்று மனநிம்மதியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சூரல்மாலா பகுதியைச் சேர்ந்தவர் தன்ஸீரா. இவருக்கு பிறந்து 40 நாள்களே ஆன அனாரா என்ற பெண் குழந்தையும், முகமது ஹயான் என்ற 6 வயது மகனும் உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டபோது இவர்களது வீட்டில் தன்ஸீரா, அவரது குழந்தைகள், தன்ஸீராவின் தாய் அமீனா, அவரது பாட்டி பத்தும்மா ஆகியோர் இருந்துள்ளனர். அமீனாவும், பத்தும்மாவும் சேற்று மணலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று நினைத்த தன்ஸீரா தனது கையில் அனராவை தூக்கிக் கொண்டு, முகமது ஹயானை வீட்டின் மேல்தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். நிலச்சரிவில் வீடு புரட்டிபோடப்பட்ட நிலையில், சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டான். குழந்தை கீழே தவறிய நிலையில், குழந்தையின் கையை மட்டும் தன்ஸீரா பிடித்துக் கொண்டிருந்துள்ளார். இதில், குழந்தையின் கையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து, மீட்புப் படையினர் அப்பகுதிக்கு வந்தபோது தன்ஸீராவையும், அவரது குழந்தையையும் மீட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஒரு கம்பியைப் பிடித்து தொங்கியபடி இருந்த சிறுவனும் மீட்கப்பட்டுள்ளார். குழந்தைகள் மீட்கப்பட்டிருந்தாலும் தன் கண்முன்னே தாயும், பாட்டியும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட பாதிப்பிலிருந்து மீளா துயரில் தன்ஸீரா உள்ளார்.












Click it and Unblock the Notifications