ஹலால் வேணாம்... மாட்டுக்கறி வேணும்! கேரளாவில் கடை ஊழியர்களை தாக்கிய பாஜக முன்னாள் உறுப்பினர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மாட்டுக்கறி வாங்க சென்ற இருவர் அனைத்திலும் ஹலால் முத்திரை குத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் கடை ஊழியர்களை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் பெரம்ப்ராவில் பாதுஷா ஹைபர் மார்க்கெட் அமைந்துள்ளது.
இங்கு பிரசூன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மாட்டுக்கறி வாங்குவதற்காக சென்றுள்ளனர்.
ஹலால் முத்திரை
சூப்பர் மார்க்கெட்டில் இருந்த மாட்டுக்கறி பாக்கெட்டுகள் அனைத்திலும் ஹலால் என்ற முத்திரை குத்தப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ஹலால் உணவை புறக்கணிக்க முடிவு செய்திருந்த இருவரும், கடை ஊழியர்களை அழைத்து ஹலால் ஸ்டிக்கர் ஒட்டப்படாத மாட்டுக்கறி இருக்கிறதா எனக்கேட்டுள்ளனர். கடை ஊழியர்களோ ஹலால் செய்யப்பட்ட மாட்டுக்கறி மட்டுமே உள்ளதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இருவரும் தகராறில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
கடை ஊழியர்கள் மீது தாக்குதல்
அப்போது சூப்பர் மார்க்கெட்டுக்குள் வாடிக்கையாளர்கள் நுழையாதபடி பாதையை இருவரும் மறைத்துக்கொண்டனர். இதனை கடை மேலாளர் ஆனந்த் மற்றும் கடை ஊழியர்கள் தட்டிக்கேட்டு உள்ளனர். உடனே ஆனந்த் மற்றும் கடை ஊழியர்களை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கிய இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.
முன்னாள் பாஜக உறுப்பினர்
மற்ற ஊழியர்களான சுஜித், ரஜிலேஷ் ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. சூப்பர் மார்க்கெட் மேலாளர் ஆனந்த் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசூனை கைது செய்தனர். ஹரிபிரசாத் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. கைதான பிரசூனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னாள் பாஜக உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். மீது குற்றச்சாட்டு
இந்த சம்பவத்தை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பான (DYFI), இளைஞர் காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. மற்றும் வர்த்தக அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே முக்கிய காரணம் என குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.