கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசம்... பினராயி விஜயனின் கெத்தான அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் கேரளா மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை வீசுகிறது. தடுப்பூசி எப்போது கிடைக்கும் என அந்த மாநில மக்கள் உள்பட நாடு முழுவதும் அனைவரும் காத்து இருக்கின்றனர்.

உலக நாடுகளை பாடுபடுத்தி வரும் கொரோனாவை ஒழிக்க பல நாடுகள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டன. இந்தியாவில் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்தியாவை பொறுத்த அளவில் தமிழகத்தில் கொரோனா குறைந்து இருந்தாலும், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை இருந்து வருகிறது. அங்கு கடந்த சில மாதமாக தினமும் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று மட்டும் அங்கு 5,949 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 32 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் கேரளம் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்த மாநில முதல்வர் பின்ராயி விஜயன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும். தடுப்பூசிக்காக மக்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் அரசு வாங்காது. கேரளாவில் கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவது நிம்மதி அளிக்கிறது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. இதற்கு பின்னர் கரோனா பாதிப்பு உயருமா என்பது இனிதான் தெரிய வரும் என்று பினராயி விஜயன் தெரிவித்தார். ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக போடப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications