என்ஐஏ சோதனையை கண்டித்து கேரளாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா பந்த்.. பஸ் கண்ணாடிகள் உடைப்பு
திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், தலைமை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு (பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டன.
இந்த பந்தை மீறி இயக்கிய பேருந்துகள், லாரிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று அதிகாலை 3 மணிக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் அமலாக்கத் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தன. இந்தியா முழுவதும் 106 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், பயிற்சி அளித்தல், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இடங்களில் நாடு முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை
கேரளா
கேரளாவில் 22 பேரும், கர்நாடகா 20 பேரும், மகாராஷ்டிரா 20 பேரும், ; தமிழகத்தில் 10 பேரும், ஆந்திராவில் 5 பேரும், அஸ்ஸாமில் 9 பேரும் , புதுவையில் 3 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 8 பேரும் என பாப்புலர் ஃபிரண்ட் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆர்ப்பாட்டம்
இது தொடர்பாக ஆங்காங்கே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் என்ன தீவிரவாதிகளா, எங்களை தீவிரவாதிகளாக மடைமாற்றும் செயலை ஏன் செய்கிறீர்கள். கொரோனா காலத்தில் மதம் கடந்து நாங்கள் செய்த பணிகள் எல்லாம் மறந்து போயிற்றா என்று ஆதங்கத்துடன் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
12 மணி நேர பந்த்
இந்த நிலையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்றைய தினம் 12 மணி நேர பந்த் போராட்டத்திற்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது பந்த். இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதை மீறி பேருந்துகளை இயக்கியதால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இரு பேருந்துகள் மீது தாக்குதல்
ஆலப்புழாவில் பந்தை மீறி இயக்கப்பட்ட இரு பேருந்துகள், இரு லாரிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் கோழிக்கோட்டில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கண்ணாடி உடைந்து ஓட்டுநர் காயமடைந்துள்ளார். மேலும் தாக்குதல் காரணமாக ஹெல்மெட் அணிந்தபடியே பேருந்துகளை டிரைவர்கள் இயக்கி வருகிறார்கள்.