சபரிமலை கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்கு நடை திறப்பு.. நிபா வழிகாட்டு நெறிமுறை வெளியிட கோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளைய தினம் திறக்கப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று கேரள ஹைகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் வரும் 18ம் தேதி தொடங்குகின்றன. இதை முன்னிட்டு 17ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார்.

அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்த பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தலாம். 22ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும்.
ஐயப்ப சாமியை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று கேரள ஹைகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அது தொடர்பாக தேவசம்போர்டு கமிஷனருடன் கலந்தாலோசித்து தேவையான முடிவை எடுக்குமாறு கேரள மாநில சுகாதாரத்துறை செயலருக்கு ஹைகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்டது போல பள்ளிகளுக்கு விடுமுறையும் லாக்டவுனும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications