ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் தொல்லை? பாதிக்கப்பட்ட இளைஞர் எடுத்த சோக முடிவு.. கேரளாவில் ஷாக்
திருவனந்தபுரம்: கேரளாவில் சிறு வயது முதல் ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர் அனந்தது அஜி. 26 வயது இளைஞரான இவர், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருந்தனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அனந்தது அஜி தனது தற்கொலைக்கான காரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதாவது குழந்தைப் பருவத்தில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள், அவரது மனநலப் பிரச்சனைகளுக்கும், தற்கொலை முடிவிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இது எனது மரண வாக்குமூலம். நான் பலமுறை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளேன். எனது சிறு வயதில், ஒருவரால் மீண்டும் மீண்டும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன். மேலும், ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய பல நபர்களாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவர்களின் முழு அடையாளங்களும் எனக்குத் தெரியாது. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆர்.எஸ்.எஸ் தொண்டரை ஒருபோதும் நண்பராக ஆக்காதீர்கள். உங்கள் தந்தை, சகோதரன் அல்லது உங்கள் மகன் யாராக இருந்தாலும், அவர்களை உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி வையுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
இந்த தற்கொலை கடிதம் வெவ்வேறு நாட்களில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 1,000 வார்த்தைகள் கொண்டதாக இருக்கின்றன. அஜி ஒசிடி எனப்படும் கடுமையான மனநல நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த பாதிப்புகளுக்கு காரணமே அவர் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்தான் என்று சொல்லப்படுகிறது.
கேரளாவில் இடது ஜனநாயக கட்சிகளின் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அம்மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தினசரி ஷாகாக்களைக் கொண்டுள்ளது. மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அதிக அடர்த்தியைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய இடதுசாரி வாலிபர் அமைப்பு, "ஆர்எஸ்எஸ் அமைப்பின் மனித தன்மையற்ற செயல் இந்த சம்பவம் மூலம் வெளிவந்திருக்கிறது. இந்த அமைப்பின் கிரிமினல் சக்திகளை சட்டத்திற்கு முன் கொண்டுவர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications