தங்க தகடுகளை உடனே பாபா ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்புங்க! சபரிமலை தங்க திருட்டு! கேரள ஐகோர்ட் அதிரடி
திருவனந்தபுரம்: சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு விசாரணை இப்போது தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே கோயிலில் மாயமான தங்கத்தின் மாதிரிகளை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உட்பட சோதனை மையங்களில் ஆய்விற்காக அனுப்பச் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குக் கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது..
உலக பிரசத்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த 2019ல் தங்கத் திருட்டு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அதாவது அந்தக் காலகட்டத்தில் கோயில் புனரமைப்புப் பணிகள் நடந்தது. அப்போது கருவறை முன்பு இருக்கும் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் உள்ள தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. அதற்குத் தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் கோயிலில் அணிவிக்கப்பட்டன.

சபரிமலை தங்கத் திருட்டு
இந்தப் பணிகளில் துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசம், கருவறை கதவுகளில் இருந்த தங்கம் மாயமானதாகவும் சுமார் 4 கிலோ தங்கம் திருட்டு போனதாகப் புகார்கள் எழுந்தன. கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை இப்போது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி. ஜெயகுமார் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை தொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் துவாரபாலகர் சிலைகளிலிருந்து தங்கம் காணாமல் போன வழக்கில், கூடுதலாக நான்கு நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதில் இருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சிறப்புப் புலனாய்வுக் குழு குறிப்பிட்டது.
பல்வேறு ஆய்வுகள்
அதேபோல, ஸ்ரீகோவில் கருவறை கதவில் தங்கம் காணாமல் போன வழக்கிலும், இரண்டு நபர்களிடம் கூடுதலாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் ஒருவருக்கு இதில் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், ஆரம்பத்தில் எவ்வளவு தங்கம் இருந்தது, அதில் எவ்வளவு தங்கம் திருடப்பட்டது ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்டறிய அறிவியல் பகுப்பாய்வு அத்தியாவசியமானது என்று புலனாய்வுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. இதற்காக எக்ஸ்-ரே , இன்டக்டிவ்லி கப்பிள்ட் பிளாஸ்மா மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி என பல ஆய்வுகளை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவு
இந்தச் சோதனைகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு கேரளா உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கையை ஏற்ற கேரள ஐகோர்ட், பாபா அணு ஆராய்ச்சி மையம் உட்பட சோதனை மையங்களில் ஆய்விற்காக அனுப்பச் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி அளித்துள்ளது இதன் மூலம் முன்பு எவ்வளவு தங்கம் இருந்தது, இப்போது இருக்கும் தங்கத்திற்கும் இடையேயான வேறுபாடுகளை ஒப்பிட முடியும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும் நீதிபதிகள், "அறிவியல்பூர்வமாக தங்கம் மாயமாகி இருக்கிறதா.. வேறு எந்த உலோகம் சேர்க்கப்பட்டது என்பதை இதன் மூலம் தீர்மானிக்க முடியும். உலோகக் கலவையின் அமைப்பில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்கள் கூட தங்கம் நீக்கப்பட்டதைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டும்" என்று தெரிவித்தனர்.
பாபா அணு ஆராய்ச்சி மையம்
இந்தப் பரிசோதனையை நடத்த தங்க மாதிரிகள் முதலில் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், இந்த குறிப்பிட்ட சோதனைகளை நடத்தும் வசதி அங்கு இல்லை. இதனால் இந்தச் சிறப்புச் சோதனைகளை மேற்கொள்ள மும்பையின் பாபா அணு ஆராய்ச்சி மையம், ஜாம்ஷெட்பூரின் தேசிய உலோகவியல் ஆய்வகம், ஹைதராபாத்தின் பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகம் உள்ளிட்ட முக்கிய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களை அணுகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
நீதிபதிகள் மேலும், "இந்தத் தங்கத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் கோயிலின் தூய்மையையே கேள்விக்குள்ளாக்குகின்றன. இவை வெறும் வாய்மொழி சாட்சியங்கள் அல்லது ஆவணப் பதிவுகள் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியாது. ஏனெனில் அவை சர்ச்சைக்கு வழிவகுக்கலாம். எனவே, சுதந்திரமான சரிபார்ப்பு மற்றும் கடுமையான ஆய்வுகளே இதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications