டிசம்பம் மாதத்தில் சபரிமலை போறீங்களா? தினமும் திணறுது சன்னிதானம்! கேரள காவல்துறை சொன்ன முக்கிய தகவல்
திருவனந்தபுரம்: உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் நடந்து வரும் நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் முந்தைய ஆண்டை விட பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் சுமூக தரிசனம் நடந்து வருகிறது எனவும், டிசம்பர் இறுதி வாரத்தில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என சபரிமலை போலீஸ் சிறப்பு அதிகாரி சீராக ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித் தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி விரதமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு திரண்டு வருகின்றனர்.
இதுவரை இல்லாத வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் புக்கிங் மூலம் 80 ஆயிரம் பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் முன்பதிவு செய்யாமல் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

சபரிமலை ஐயப்பன் கோவில்
இதனையடுத்து ஸ்பாட் புக்கிங் உள்ளிட்டவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், நிலைமை ஓரளவு சீரடைந்தது. சில நாட்களைத் தவிர்த்து, பிற தினங்களில் தொடர்ந்து அதிகளவிலான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கூட்டநெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இதனால் நீண்ட வரிசையிலும், காத்திருப்பு நேரத்திலும் நேரக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மண்டல பூஜை
இருந்த போதும், நவம்பர் 16ம் தேதியில் இருந்து பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து குறையாமல் அலைமோதி வருகிறது. தினசரி ஒரு லட்சத்தை நெருங்கும் வகையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சில நாட்களில் ஒரு லட்சம் கடந்தும் பக்தர்கள் தரிசனம் செய்வதும் தொடர்கிறது. இந்நிலையில், டிசம்பர் கடைசி வாரத்தில் பத்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என சபரிமலை போலீஸ் சிறப்பு அதிகாரியான ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித் கூறியுள்ளார்.
கேரள காவல்துறை
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," கடந்த ஆண்டை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், முறையான ஏற்பாடுகள் மூலம் அனைவருக்கும் சீரான தரிசனம் சாத்தியமாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்த நேரத்தில் 21 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் இந்த முறை அது 25 லட்சத்தை தாண்டியுள்ளது. முதல் சில நாட்களில் அதிக கூட்டம் இருந்து நெரிசல் ஏற்பட்ட போதிலும் அந்த சிரமம் உடனே தீர்க்கப்பட்டது.
"ஆன் லைன்" முன்பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட நாளில் பல பக்தர்கள் வந்தால் அனைவருக்கும் தரிசனத்திற்கு நேரம் கிடைக்கும்.
சபரிமலை கூட்டநெரிசல்
முன்பதிவு இல்லாமல் வரும் பக்தர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி உடனடி முன்பதிவிற்கு காத்திருக்க தயாராக இருக்க வேண்டும். இந்த பூஜைக்காலத்தில் வார இறுதி நாட்களில் கூட்டம் குறைவாக இருப்பதும், இதர வார நாட்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவது புதிய அனுபவமாக உள்ளது. டிசம்பர் கடைசி வாரத்தில் பத்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பக்தர்களின் சமூக தரிசனத்திற்கு அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது," என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications