நீட் தேர்வால் மாணவர்களுக்கு இவ்ளோ பாதிப்பா? தமிழக டேட்டாவை பகிர்ந்து கேரள காங்கிரஸ் வைத்த டிமாண்ட்
திருவனந்தபுரம்: நீட் தேர்வு ஆங்கில வழி மற்றும் சிபிஎஸ்இ தேர்வு வாரியத்தில் படித்த மாணவ மாணவியருக்கே சாதகமாக இருப்பதாக தமிழகத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் காட்டுவதாகவும் இதேபோன்ற தரவுகள் பிற மாநிலங்களிலும் எடுக்க வேண்டும் என கேரள காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.

நீட் தேர்வு முறைகேடு?: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு துவக்கம் முதலே குரல் எடுத்து வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு தற்போது நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுக்க தொடங்கியுள்ளன. அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினார்கள்.
தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளை தேசிய தேர்வு முகமை மறுத்தது. இந்தநிலையில் நீட் தேர்வு முடிவு வெளியானபோது ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும், 1.563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேசிய தேர்வு முகமை: இது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் பொது கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும் 1,563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த இருப்பதாகவும் தேசிய தேர்வு முகமை கூறியது.
இந்த அடுத்தடுத்த சர்ச்சைகளால் பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது. நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கண்டித்தும், தேர்வை ரத்து செய்யக்கோரியும் பீகார் மாநிலத்தில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள காங்கிரஸ் ட்வீட்: தற்போது முடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், நீட் தேர்வு என்பது ஆங்கில வழிக்கல்வி மற்றும் சிபிஎஸ்இ மீடியத்தில் படித்தவர்களுக்கே அதிக சாதகமாக உள்ளதாக கேரள காங்கிரஸ் கட்சி புள்ளி விவரங்களுடன் கூறியுள்ளது. இது தொடர்பாக கேரள காங்கிரஸ் கட்சியின் இணைய பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆங்கிலம் மற்றும் சிபிஎஸ் இ வழியில் படித்த மாணவர்களுக்கே நீட் பெரிதும் பயனளிப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் உள்ளூர் பள்ளிகளின் படிக்கும் மாணவர்களின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது. தமிழ்நாடு இந்த பிரச்சினையைத்தான் 2017ல் இருந்தே எழுப்பி வருகிறது. இதேபோன்ற புள்ளி விவரங்கள் பிற மாநிலங்களிலும் தேர்வு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளது.
ஒரு புள்ளி விவரத்தையும் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது. அதில், நீட் தேர்வுக்கு முன்பாக (2016-17)
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள்:
சிபிஎஸ்இ - 097 சதவிகிதம்
மாநில கல்வி வாரியத்தில் படித்தவர்கள் - 98.23 சதவிகிதம்
ஆங்கில வழிக்கல்வி: 85.12
தமிழ் வழிக்கல்வி - 14.88
2.5 லட்சத்திற்கும் கீழ் வருமானம் பெறும் பெற்றொர்களின் பிள்ளைகள் - 47.42 சதவிகிதம்
2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் பிள்ளைகள் - 52.11
நீட் தேர்வு அமல்படுத்திய பிறகு:
சிபிஎஸ்இ - 38.84 சதவிகிதம்
மாநில கல்வி வாரியத்தில் படித்தவர்கள் - 59.41 சதவிகிதம்
ஆங்கில வழிக்கல்வி - 98.01
தமிழ் வழிக்கல்வி - 1.99
2.5 லட்சத்திற்கும் கீழ் வருமானம் பெறும் பெற்றொர்களின் பிள்ளைகள் - 41.05 சதவிகிதம்
2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் பிள்ளைகள் - 58.95












Click it and Unblock the Notifications