3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி திரட்டிய நிதி.. கேரள முதல்வரிடம் ஒப்படைத்த தமிழக சிறுமி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி திரட்டப்பட்ட நிதி மற்றும் தனது சேமிப்பை முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைத்துள்ளார். சிறுமியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்தனர்.

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மாநில மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வயநாடு மாவட்ட மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது இந்த நிலச்சரிவு சம்பவம். நூற்றுக்கணக்கானோர் தங்களது உயிரையும், ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவுகள், வீடுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நிவாரண உதவியை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி வயநாடு மக்களுக்காக நிதி திரட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஹரிணி. இவர் மூன்று மணி நேரம் பரதநாட்டியம் ஆடி வயநாடு மக்களுக்காக நிதி திரட்டியுள்ளார். இதையடுத்து, தான் சேமித்து வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய், திரட்டப்பட்ட நிதி ஆகியவற்றை கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேரிடர் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். சிறுமி பரதநாட்டிம் ஆடிய வீடியோவை அவர்கள் முதல்வரிடம் காண்பித்தனர். முதல்வர் பினராயி விஜயனை சிறுமி ஹரிணி சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் சிறுமியின் இந்த செயலைப் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications