கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு 'கோவில்களில்' ஆர்எஸ்எஸ் பயிற்சிகளுக்கு மீண்டும் அதிரடி தடை!
திருவனந்தபுரம்: கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்துத்துவா இயக்கமான, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகள் மேற்கொள்ள அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பாஜகவால் வலிமை பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் வலிமையான கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிறது. கேரளாவில் கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் இயல்பாகவே பயிற்சிகளை மேற்கொள்வது நீண்டகாலமாக நடந்து வந்தது. இவற்றில் ஆயுத பயிற்சியும் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பயிற்சிகளை மேற்கொள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்கனவே ஒரு தடை விதித்தது. ஆனால் தடையை பொருட்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக கேரளா உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பான் மசாலா, ஹான்ஸ் போன்றவற்றை பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் அவற்றை கோவில் சுவர்களிலும் துப்பி வைத்து அசிங்கப்படுத்துகின்றனர்; கோவில்களின் அமைதி சூழ்நிலையை கெடுக்கின்றனர் எனவும் அந்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இவ்வழக்கில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோவில் வளாகங்களில் ஆயுதப் பயிற்சி மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தற்போது புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தடையை ஆர்.எஸ்.எஸ். விமர்சித்துள்ளது. கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசாங்கம் இந்து கோவில்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு என்பதே கேரளா ஆளும் இடதுசாரி அரசின் கீழ் இருப்பதுதான் என ஆர்.எஸ்.எஸ். இயக்கம் விமர்சித்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1925-ம் ஆண்டு இதே விஜயதசமி நாளில்தான் தொடங்கப்பட்டது. இந்த விஜயதசமி நாளில் ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஊர்வலங்கள், அணிவகுப்புகள் நடத்தும். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தமிழ்நாடு அரசு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. தற்போது கேரளாவிலும் கோவில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அடுத்தடுத்த தடைகள் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரை அதிர்ச்சி அடையவும் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications