தமிழகத்திற்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. எந்த ரூட்டில் வருதாம் தெரியுமா? குமரிக்கு அடித்த "லக்"
திருவனந்தபுரம்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் வழித்தடம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி- ஸ்ரீநகர் வழித்தடத்திலும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுக்க ஏசி வசதி கொண்டது ஆகும். சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவுகள், பயோ டாய்லட்கள், வைஃபை வசதி என விமானத்திற்கு நிகரான சொகுசுகளுடன் வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: பிற ரயில்களுடன் ஒப்பிடும் போது வந்தே பாரத் ரயில்கள் செல்லும் வேகமும் அதிகம். இதனால், பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக இந்த ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது நாடு முழுவதும் 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சென்னை - நெல்லை, சென்னை - கோவை, சென்னை - பெங்களூர், கோவை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்க்ள் அனைத்து இருக்கை வசதி கொண்டவையாக உள்ளது.
பெட்டிகள் தயாரிக்கும் பணி: இதனால், நீண்ட தொலைவிற்கு ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால், இரவு நேர பயணங்கள் மற்றும் பல மாநிலங்களுக்கு இடையேயான சேவையாக வந்தே பாரத் ரயிலை இயக்கும் விதமாக ஸ்லீப்பர் ரயிலை அறிமுகம் செய்யவும் ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படலாம் என ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. அதன்பிறகு படிப்படியாக பல்வேறு வழித்தடங்களிலும் இந்த ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்து இருக்கிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் உட்புற வடிவமைப்பு குறித்த புகைபடங்களும் அண்மையில் வெளியாகின.
கேரளாவுக்கு இரண்டு ரயில்கள்: ஹைடெக் வசதிகளுடன் இந்த ஸ்லீப்பர் பெட்டிகளின் தோற்றம் இருப்பதால் பயணிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலுக்கு உள்ளது. இதனிடையே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தமிழக வழித்தடத்திலும் இயக்கப்பட இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கேரளாவிற்கு இரண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை ஒதுக்குவது தொடர்பாக ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறதாம்.
டிசம்பர் மாதத்திற்குள்: திருவனந்தபுரத்தின் கொச்சுவேலி - பெங்களூர் மற்றும் கன்னியாகுமரி - ஸ்ரீநகர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் ஸ்லீப்பர் சேவைகளை தொடங்குவது பற்றி ரயில்வே வாரியம் முன்மொழிந்துள்ளதாம். ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை கொங்கன் ரூட்டில் இயக்கப்படலாம் என்றும் வாரத்திற்கு மூன்று நாட்கள் சேவையாக இந்த ரயில் இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ரயில்வே வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதம்பூர் - ஸ்ரீநகர் பரமுல்லா ரயில்வே டிராக் பணிகள் முடிந்த பிறகு இந்த சேவை தொடங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த வந்தே பாரத் ரயில் சேவையை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications