பெண்களின் சுவர்.. கேரளாவில் 620 கிமீக்கு 10 லட்சம் பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் போராட்டம்!
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் 10 லட்சம் பெண்கள் 620 கிமீக்கு வரிசையாக நின்று பெரிய மனித சங்கிலி போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். கேரள கம்யூனிச அரசின் முழு ஆதரவுடன் இந்த போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
கடந்த 2018, செப்டம்பர் 28ம் தேதி சபரிமலை வழக்கில் தீர்ப்பு வந்தது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட வலதுசாரியினர் கேரளாவில் பெரிய போராட்டத்தில் குதித்தனர். சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக கடுமையாக போராடினார்கள்.
பெரும் பேரணி
இதற்காக கேரளாவில் மூன்றுக்கும் மேற்பட்ட பேரணிகளை வலதுசாரியினர் நடத்தினார்கள். கடந்த டிசம்பர் 26ம் தேதி கூட ஐயப்ப ஜோதி என்ற விழாவை நடத்தினார்கள். சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக இவர்கள் ஐயப்ப ஜோதி பேரணியை நடத்தினார்கள். இதில் பலர் கலந்து கொண்டனர்.
பதிலடி
இந்த போராட்டங்களுக்கு கேரளா அரசு தக்க பதிலடி கொடுக்கும் என்று ஏற்கனவே அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பெண்கள் அமைப்புகள் பலவற்றுடன் பினராயி விஜயன் சந்திப்பு நடத்தினார். சந்திப்பின் முடிவில் கேரளாவில் பெண்கள் சார்பில் பெரிய மனித சங்கிலி போன்ற மதில் அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இன்று நடக்கிறது
இந்த ''பெண்களின் மதில் சுவர்'' போராட்டம் இன்று நடந்தது. இது மிகவும் அமைதியான முறையில் நடந்தது. மாலை 4 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கியது. பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு வனிதா மதில் என்று பெயர் வைக்கப்பட்டது.
எவ்வளவு தூரம்
மொத்தம் 620 கிமீக்கு பெண்கள் கைகளை இணைத்து சங்கிலி போல சாலை ஓரம் நின்றனர். கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு தொடங்கி தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரை இந்த சங்கிலி நீண்டது. ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பெண்களை வழி நடத்தினார். 10 லட்சம் பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
என்ன கோரிக்கை
பெண்களுக்கான சம உரிமை என்று கோரிக்கையின் அடிப்படையில்தான் இந்த போராட்டம் நடந்தது. பெண்களுக்கு அனைத்திலும் சமமான உரிமை வேண்டும் என்று கோரிக்கை வைத்து பெண்கள் இன்று அணி திரண்டுள்ளனர். சபரிமலை பிரச்சனைக்கு தக்க பதிலடியாக இது இருக்கும் என்று கேரளா அரசு நினைக்கிறது.
பெரிய ஆதரவு
கேரளா முதல்வர் பினராயி விஜயன் காசர்கோட்டில் நடக்கும் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். 4 மணிக்கு பெண்கள் தங்கள் கைகளை இணைக்க தொடங்கி 5 மணி வரை சங்கிலி போல நின்றனர். இந்த நேரத்தில் மலையாளத்தில் அவர்கள் உறுதிமொழி எடுத்தனர். பெண்கள் உரிமைக்காக இவர்கள் ஒன்றாக உறுதிமொழி எடுத்தனர்.