அச்சுதானந்தன் உடல்நிலையில் முன்னேற்றம்... மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு நின்றது
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான அச்சுதானந்தனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான தலைவலி காரணமாக அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வரும் மருத்துவர்கள், அச்சுதானந்தன் உடல்நிலை தேறிவருவதாக கூறியுள்ளனர்.
அரசு முறைப் பயணமாக இன்று சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி
வயது மூப்பு நோய்
கேரள அரசியலில் முக்கியத் தலைவர், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டவர் வி.எஸ்.அச்சுதானந்தன். அண்மைக்காலத்தில் வயது மூப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.
கடும் தலைவலி
கடந்த சனிக்கிழமை இரவு அச்சுதானந்தனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. கூடவே கடுமையான தலைவலியும் எற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யூ.டி.ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை
அச்சுதானந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்து தீவிர சிகிச்சையை தொடங்கினர். மேலும், அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்தும் வந்தது.
ரத்தக்கசிவு நின்றது
கடந்த 2 நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததன் விளைவாக மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அச்சுதானந்தன் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அனுமதியில்லை
அச்சுதானந்தன் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் குவியத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவரை காண மருத்துவமனை நிர்வாக அனுமதி மறுத்துள்ளது.