கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே
திருவனந்தபுரம்: நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்குக் கேரளாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் விஜய் செல்வாக்கு கேரளா தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது தொடர்பாக அங்குள்ள அரசியல் கட்சிகள் சில முக்கிய ஆலோசனைகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் இப்போது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பிலேயே இயங்கி வருகிறார். அதேநேரம் இதுவரை விஜய்யின் செயல்பாடுகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. கணிசமான வாக்குகளை மட்டுமே விஜய் பெறுவார் என சொல்லப்படுகிறது.

கேரளா
அதேநேரம் விஜய்யின் அரசியல் நகர்வுகள் தமிழ்நாட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவரது செல்வாக்கு அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அது அங்குள்ள முக்கிய கட்சிகளிடையே புதிய அரசியல் கணக்குகளைத் தூண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் விஜய்யின் ரசிகர் மன்றமே இப்போது வரை அவரது கட்சியாகவும் இருப்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் விஜய்க்கு எப்போதும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கும். அந்த பட்டாளம் தான் அரசியலில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதாம். அங்குள்ள இடதுசாரி அரசு மக்களிடையே எடுத்த சர்வேயில் இது தெரிய வந்து இருக்கிறதாம்.
செல்வாக்கு
அதாவது அங்குள்ள பினராயி அரசுக்கு எதிராகக் கடும் ஆளும் எதிர்ப்பு அலை உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், கேரள வாக்காளர்களிடையே விஜய்க்கு சுமார் 4-5% ஆதரவு இருப்பதாகக் காட்டுகின்றன. இந்த வாக்குச் சதவிகிதம் சிறியதாகத் தோன்றினாலும், கடுமையான போட்டி நிலவும் தேர்தல் களத்தில் இது முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக அமையலாம். இது கேரளாவில் அரசியல் கணக்கை மாற்றி அமைப்பதாக இருக்கிறது.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் தரப்பில் கேரளாவில் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என விஜய்யிடம் கோரப்பட்டது. இருப்பினும், தமிழகத்தில் விஜய் காங்கிரஸ் கூட்டணி அமையாத நிலையில், இது அப்படியே விடப்பட்டது. இதற்கிடையே கேரளாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், விஜய்யை இடதுசாரி கூட்டணிக்கு ஆதரவு அளிக்கச் சொல்லிக் கேட்கலாம் என யோசித்து வருகிறார்களாம். அது எதிர்ப்பு வாக்குகளைக் குறைக்க ஓரளவுக்கு உதவலாம் என்பது அவர்கள் திட்டம்
ஆலோசனை
சமீபத்தில் கூட கேரள முதல்வர் பினராயி விஜயன், தேர்தல் கள நிலவரம் குறித்து தேசியத் தலைமையுடன் விவாதித்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது, கேரளாவில் விஜய்யின் வளர்ந்து வரும் செல்வாக்கு குறித்த சர்வேக்களை பினராயி விஜயன் தேசிய தலைமைக்கு எடுத்துரைத்தாக சொல்லப்படுகிறது. அவரை இணைத்துக் கொள்வது இடதுசாரி கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என்றும் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக விஜய் தரப்பிடம் பேசவும் முயற்சிகள் நடந்து வருகிறதாம். விஜய்யின் செல்வாக்கு, குறிப்பாக இளம் வாக்காளர்களிடையே இருக்கும் செல்வாக்கு ஆட்சி இழப்பைத் தடுக்கவும் உதவும் என்பதே அவர்கள் யோசனை!
தமிழக தலைவர்கள்
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரி தலைவர்கள் இந்த யோசனைக்கு ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கும் சூழலில் விஜய்யுடன் பேசுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லியுள்ளனர். மேலும், தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சினிமா நட்சத்திரத்துடன் இணைவது கட்சியின் தனித்துவமான அடையாளத்தை அச்சுறுத்தலாம் என்று கூறியுள்ளனர். இதையும் தாண்டி விஜய்யின் ஆதரவு வேண்டும் எனக் கேரள இடதுசாரிகள் நினைத்தால் அவர்கள் நேரடியாக விஜய்யைத் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு தலைவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications