கேரளாவில் பரவும் 'வாக்கிங் நிமோனியா" குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கும்.. அறிகுறிகள் என்ன?
திருவனந்தபுரம்: கேரளாவில் வாக்கிங் நிமோனியா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 5 வயது முதல் 17 வயதுடையவர்களுக்கு மட்டுமே பரவி வந்த நிலையில் தற்போது குழந்தைகளுக்கும் இந்த நோய்த்தொற்று பரவுவதாக கேரள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முக கவசம் அணிவதன் மூலம் இந்த தொற்று பரவாமல் இருக்க முடியும் என்றும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் குழந்தைகள் மத்தியில் "வாக்கிங்க் நிமோனியா" நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. குளிர் கால சீசன் தொடங்கிவிட்டதால் வழக்கம் போல் சளி, இருமல் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. எனினும், இயல்பை விட அதிகமான குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருந்ததையடுத்து ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலருக்கு மைக்கோ பிளாஸ்மா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா தொற்று எனக் கண்டறியப்பட்டுள்ளது. 5 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த வாக்கிங்க் நிமோனியா பாதிப்பு முதலில் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது 5 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள மருத்துவர்கள் கூறுகிறார்கள். அரிதாக பெரியவர்களையும் சில நேரம் இந்த நிமோனியா தாக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வாக்கிங்க் நிமோனியாவின் அறிகுறிகள் என்று பார்த்தால், லேசான காய்ச்சல், நீடித்த இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி, தோலில் தடிப்புகள் ஆகியவை ஏற்படும். இருமல் 5 நாட்களுக்கு மேலாக நீடித்தால் மருத்துவரை உடனடியாக சென்று ஆலோசனை பெறுவது அவசியம் எனவும் சுகாதாரத்துறை வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எப்படி பரவும்?
மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா, பெரும்பாலானோருக்கு நுரையீரல் தொற்றை ஏற்படுத்தக்கூடியது. பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும் தும்மும் போது வெளியேறும் எச்சில் துளிகள் மற்றும் மூச்சுக்காற்று மூலமாக இந்த நோய் பரவக்கூடியது.
எனவே இத்தகைய அறிகுறிகள் இருக்கும் குழந்தைகள் மாஸ்க் அணிவது அவசியம் என்று கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொது இடங்களில் செல்லும் போதும், பள்ளிகள், டியூஷன் செண்டர்களுக்கு சென்றாலும் குழந்தைகளுக்கு அவசியம் மாஸ்க் அணிவிப்பது நல்லது எனவும் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications