மூழ்கிய கப்பல்.. கொல்லம் கடற்கரையில் ஒதுங்கும் கன்டெய்னர்கள்.. நெல்லை, அரக்கோணம் மீட்பு குழு விரைவு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்ற கப்பல் கடலில் மூழ்கியது. இதில் அந்த கப்பலில் இருந்த கண்டெய்னர்களும் கடலில் மூழ்கின. தற்போது கடலில் மூழ்கிய கண்டெய்னர்கள் பாலக்காடு கடற்கரை அருகே கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் யாரும் அதனை தொட வேண்டாம் என்றும், கண்டெய்னர்கள் கரை ஒதுங்கினால் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று கடலில் மூழ்கிய கண்டெய்னர்களை மீட்க நெல்லை மற்றும் அரக்கோணத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கொச்சி விரைந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடலில் லைபீரியா நாட்டு கொடி கட்டப்பட்ட சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 630 கன்டெய்னர்களில் ரசாயனம், எண்ணெய் இருந்ததாக தெரிகிறது. தென்மேற்கு பருவமழையால் அரபிக்கடலில் மோசமான வானிலை நிலவியது.
பலத்த காற்று வீசிய நிலையில், கொச்சி அருகே நடுக்கடலில் சென்ற போது, சரக்கு கப்பல் திடீரென கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக மூழ்காமல் சாய்ந்தவாறு நின்றிருந்தது. இதனால் சில கன்டெய்னர்கள் சரிந்து கடலுக்குள் விழுந்தன.

8 கண்டெய்னர்கள் கரை ஒதுங்கின
கப்பலில் ரஷ்யாவை சேர்ந்த கேப்டன், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 20 ஊழியர்கள், உக்ரைன் நாட்டை சேர்ந்த 2 பேர், ஜார்ஜியா நாட்டை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 24 பேர் இருந்தனர். இதை அறிந்த கொச்சி துறைமுக நிர்வாகம், கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடலுக்குள் கப்பல் மூழ்காமல் இருக்கவும், கன்டெய்னர்கள் சரிந்து விழாமல் இருக்கவும் கப்பலில் மீதமுள்ள கேப்டன் உள்பட 3 பேர் மட்டும் பணியில் இருந்தனர். கப்பலை நிலைநிறுத்தி மீட்கும் பணி நடந்து வந்தது. இருப்பினும், கப்பல் ஒருபுறமாக சாய்ந்து மீண்டும் கடலில் மூழ்க தொடங்கியது. உடனே கேப்டன், 2 என்ஜினீயர்கள் என 3 பேர் மீட்கப்பட்டனர். மேலும் கப்பலில் இருந்த 630 கன்டெய்னர்களும் கடலுக்குள் விழுந்தன. இதனால் கடலில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பொதுமக்கள் யாரும் தொட வேண்டாம்
இதற்கிடையே, கப்பலில் மூழ்கிய கண்டெய்னர்கள் கொல்லம் கடற்கரையில் கரை ஒதுங்க தொடங்கியுள்ளது. 8 கண்டெய்னர்கள் கொல்லம் அருகே உள்ள கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளன. கடல் அலையில் சிக்கி கண்டெய்னர்கள் சேதம் அடைந்துள்ளன. கரை ஒதுங்கிய பல கண்டெய்னர்கள் காலியானதாகவே உள்ளது. குடியிருப்பு பகுதி அருகிலேயேயும் கரை ஒதுங்கியிருப்பதால் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கரை ஒதுங்கும் கன்டெய்னர்களை பொதுமக்கள் கையால் தொடவோ அல்லது அதன் அருகில் செல்லவோ கூடாது. கரை ஒதுங்குவதை கண்டால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 361 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயில் இருப்பதாக தெரிகிறது.
நெல்லை, அரக்கோணம் மீட்பு படை
இவை, ரசாயனம் கடல் நீருடன் கலந்தால், வேதியியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கப்பலில் மூழ்கிய கண்டெய்னர்களை மீட்பதற்காக நெல்லை மற்றும் அரக்கோணத்தை சேர்ந்த தேசிய மீட்பு குழுவினர் கொச்சி விரைந்துள்ளனர். அரக்கோணத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் கொச்சிக்கு விரைந்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications