வயநாடு லோக்சபா தொகுதியில் சோனியா, ராகுல் காந்தி.. பிரியங்கா காந்திக்காக இன்று முதல் பிரசாரம்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். இதற்காக வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் பிரியங்கா காந்தி இன்று வருகை தர உள்ளார். இன்று முதல் 10 நாட்கள் வயநாடு லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் தற்போது வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். பிரியங்கா காந்தி களம் காணும் முதலாவது தேர்தல் இது. இந்த தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். இதற்காக அவரது தாயார் சோனியா காந்தி, அண்ணன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருடன் பிரியங்கா காந்தி வயநாடு வருகை தருகிறார். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்கனவே பிரியங்கா காந்திக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
வயநாடு தொகுதியில் சோனியா, பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோரது நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை காசர்கோடு எம்பி ராஜ்மோகன் உன்னிதன் செய்து வருகிறார். இந்த ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்மோகன் உன்னிதன், கர்நாடகா மாநிலம் மைசூருக்கு விமானம் மூலம் வந்து சேரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கிருந்து கார் மூலம் வயநாடு வந்தடைகின்றனர் என்றார். மேலும் சோனியா காந்தி நாளை திருச்சூரை வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு தொகுதிக்கு சோனியா வருகை தருவார். அதன்பின்னரே அனைவருடனும் இணைந்து பிரியங்கா காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்வார் என்றும் ராஜ்மோகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications