காப்பாற்றுங்க! பாதி உடல் மண்ணில் புதைந்த நிலையில் இளைஞர் அலறல்! தவிக்கும் பேரிடர் மீட்பு படை
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் முண்டக்கை பகுதியில் நிலச்சரிவில் பாதி உடல் புதைந்த நிலையில் சிக்கியுள்ள நபர் தன்னை காப்பாற்றுமாறு அழைக்கும் சம்பவம் மனதை பதைபதைக்கிறது. எனினும் அந்த இடத்திற்கு செல்லும் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் அவர் இருக்கும் இடத்தை அடைய முடியாத நிலையில் மீட்பு பணியினர் தவித்து வருகிறார்கள்.
வயநாட்டில் உள்ள முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து அந்த இடத்திற்கு செல்லும் பாதையே துண்டிக்கப்பட்டு காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் ஒரு நபர் பாதி அளவு உடல் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் தன்னை காப்பாற்றுமாறு கதறி வருகிறார்.

இது குறித்த புகைப்படத்தை ஊராட்சித் தலைவர் ராகவன் தனது போனில் எடுத்து அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்பியுள்ளார். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து ராகவன் கூறியிருப்பதாவது: நிலச்சரிவால் சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் யாராலும் அந்த பகுதியை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள பல வீடுகள் இடிப்பாடுகளிலும் மணலிலும் சிக்கியுள்ளன என்றார்.
மேலும் இடிபாடுகளில் சிக்கிய நபரை காப்பாற்ற சென்ற பேரிடர் மீட்பு குழுவினர், அந்த இடத்தை அடைய முடியாமல் தவித்து வருகிறார்கள். அந்த இடத்தில் காட்டாற்று வெள்ளம் சற்றும் குறையாமல் இருந்து வருவதால் ஆபத்தில் இருக்கும் நபரை நெருங்க முடியவில்லை. மேலும் மலைகளில் இருந்தும் வெள்ள நீர் வழிந்தோடுவதும் அந்த நபரை மீட்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அவரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த பகுதி மக்கள் அவர் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மழையும் ஓயாமல் பெய்து வருவதும் மீட்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம், குன்னூரிலிருந்து பேரிடர் மீட்பு படையினர் வயநாடு விரைந்துள்ளனர்.
பின்னணி என்ன?: கேரளாவில் சூரல்மலை பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் நேற்று காலை முதலே ஆங்காங்கே லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல்வேறு கட்டடங்களை வெள்ள நீர் சூழ்ந்துக் கொண்டிருக்கிறது.
ஏராளமான வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அட்டமலையிலிருந்து முண்டகை வரையில் இருந்த ஒரே ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.
இந்த நிலச்சரிவில் சூரல்மலை பகுதியில் 500- க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கியுள்ளன. இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. அது சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்டது. இந்த பள்ளிதான் நிவாரண முகாமாக செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு அருகே இருந்த வீடுகள், கடைகள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கின.
இதில் இருந்த நூற்றுக்கணக்கானவர்கள் நிலத்தில் அப்படியே புதைந்துவிட்டனர். அவர்களை மீட்கும் பணிகளை கேரள பேரிடர் மீட்பு பணியினர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பூமிக்கடியில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதனால் மோப்ப நாய் பிரிவை அழைத்து வந்து உள்ளே ஏதாவது சடலங்கள் இருக்கின்றனவா என்பதை சோதனை செய்ய உள்ளனர்.
இடைவிடாமல் பெய்து வரும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அது போல் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்கள் வயநாடு சென்றுள்ளன. முண்டக்கையில் இருந்து விமானம் மூலம் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் சுல்தான் பத்தேரியில் உள்ள செயிண்ட் மேரி கல்லூரியில் உள்ள ஹெலிபேடிற்கு கொண்டு வரப்படுவார்கள்.
முகாமில் இருந்து உடல்கள் பிணவறைக்கு கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது போல் இந்த நிலச்சரிவால் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழும் பகுதி என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications