வயநாடு நிலச்சரிவு.. கேரளாவில் இதுவரை ஏற்படாத பேரழிவு! உடல்களை கண்டறிய மோப்ப நாய்கள்.. பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாட்டில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு எற்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக கூறப்படும் நிலையில் இதுவரை 100 பேர் பலியாகியுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு கேரளாவில் இதுவரை ஏற்படாத பேரழிவு . வயநாட்டில் 48 மணி நேரத்தில் 57 செமீ மழை பெய்துள்ளது என்றும் கூறினார்.
கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அப்போதிருந்தே அங்கு கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை கொட்டியது. தென்மேற்கு பருவமழை தொடங்கி 2 மாதத்திற்கு மேல் ஆன நிலையிலும் கேரள மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில், தான் கேரளாவின் வயநாட்டில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு எற்பட்டது.
வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில் நள்ளிரவிலும் மழை நிற்காமல் பெய்தபடி இருந்தது. இதனால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அதன் தொடர்ச்சியாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இன்று அதிகாலை 2 முறை சூரல்மலை பகுதியில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகை, மேட்டுப்பட்டி, சூரல்மலை உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன.
சூரல்மலை பகுதியில் அடுத்தடுத்த நிலச்சரிவு ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கின. இந்த வீடுகளில் சிக்கிய 1,000-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகளில் கேரளா மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதில் இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வயநாடு நிலச்சரிவு கேரளாவில் இதுவரை இல்லாத, ஏற்படாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வயநாடு பகுதியில் 57 செமீ மழை பெய்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு துறையினர், மீட்பு படையினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
ராணுவம், கடற்படை உள்ளிட்டவைகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. நிலச்சரிவின் காரணமாக பல இடங்களில் சாலைகள், மின் மாற்றிகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. தற்போது போக்குவரத்து உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்மாற்றிகளும் நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்துள்ளன. மண் சரிவில் சிக்கியும், தீப்பிடித்து எரிந்தும் 6 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 350 வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறையில் உள்ள மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம். கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சிறப்பு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு, திருவனந்தபுரத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அரசின் மீட்பு நடவடிக்கைகள் முழுமையடைய பாதிக்கப்பட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வயநாட்டில் 45 முகாம்கள் உள்பட கேரள மாநிலம் முழுவதும் 118 முகாம்களில் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications