பெண் டாக்டர் மீது பாய்ந்த சைக்கோ! "யார் தடுத்தும் நிற்கவில்லை.." போலீஸ் கண் முன் கேரளாவில் பயங்கரம்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நோயாளிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தும் நிலையிலும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடந்துள்ளது. அங்கே நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கொடூரம்: கேரளாவில் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியில் தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அங்கே உள்ள மருத்துவமனையில் இன்று 23 வயதான பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி கொடூரமாகக் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவரைக் கொலை செய்த அந்த நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆவார்.
இது குறித்து கொட்டாரக்கரா போலீசார் கூறுகையில், "இந்த கொடூர கொலையைச் செய்தது சந்தீப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்குச் சிகிச்சை பெற அவர் மருத்துவமனைக்கு வந்த நிலையில், மருத்துவர் வந்தனா தாஸ் காயத்திற்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஆத்திரமடைந்த அவர், கத்தரிக்கோலை எடுத்து அங்கு இருந்த அனைவரையும் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் புதன்கிழமை அதிகாலையில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மருத்துவர் வந்தனா தாஸ் படுகாயமடைந்த நிலையில், அவர் சில மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தாக்குதலை அந்த மருத்துவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த நபருடன் வந்த போலீசாரும் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த அந்த மருத்துவர் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
முதல்வர் இரங்கல்: மருத்துவரின் மரணத்திற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், மிகவும் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்த அவர், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
அவர் மேலும், "பணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (கேஜிஎம்ஓஏ) ஆகிய இரு மருத்துவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். மேலும், கேரள மாநில மனித உரிமைகள் ஆணையமும் தானாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இகு குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கமளிக்கக் கொல்லம் மாவட்ட போலீசாரிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
என்ன நடந்தது: இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "குடும்ப உறுப்பினர்கள் தன்னை தாக்குவதாக அவர் போலீஸ் அவசர உதவிக்குக் கால் செய்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவர் அப்போது மது அருந்தியிருந்தார், நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஆவேசமாக இருந்தார். நோயாளியின் காயத்திற்குச் சிகிச்சை அளிக்கும் போது போலீசார் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சிகிச்சை ரூமில் நோயாளியும் மருத்துவரும் மட்டுமே இருந்தனர்.
திடீரென்று, அங்கே ஒரு சலசலப்பு ஏற்பட்டது, மருத்துவர் உதவிக்காக அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். அவரை தொடர்ந்து கத்தரிக்கோல் ஏந்தியபடி 'நான் உன்னைக் கொன்றுவிடுவேன்' என்று கத்திக் கொண்டு அந்த நபரும் ஓடி வந்தார். அவர் ஏன் ஆவேசமடைந்து மருத்துவரைத் தாக்கினார் என இன்னும் தெரியவில்லை.
சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் அவரைத் தடுக்க முயன்றபோது அவர்களையும் தாக்கினார். மருத்துவமனையையும் சேதப்படுத்தினார். இதில் அந்த மருத்துவர் கொல்லப்பட்டார். அவர் மட்டுமின்றி மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அங்கிருந்தவர்களின் உதவியுடன் அவரை கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தினோம்" என்றார்












Click it and Unblock the Notifications