"ரொம்பவே அரிய நிகழ்வு.." வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு.. வெதர்மேன் சொன்ன முக்கியமான பாயிண்ட்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்த நிலச்சரிவு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கேரளாவில் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அங்குப் பல பகுதிகளில் கடந்த 2 வாரங்களாகவே தொடர்ந்து 100 மிமீ மேலாகவே மழை பெய்து வந்துள்ளது.

மழை: இந்தச் சூழலில் தான் கோழிக்கோடு, வயநாடு, மல்லாபுரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. ஏற்கனவே தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இந்த திடீர் கனமழையும் அங்கே நிலச்சரிவை ஏற்படுத்தியது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவம் இதில் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அதேநேரம் பாதிக்கப்பட்ட கிராமங்களை இணைக்கும் ஒரே பாலம் நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு விரைந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், சூலூரில் இருந்தும் 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இரங்கல்: மேலும், இந்த நிலச்சரிவு குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி இந்தச் சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு முழு உதவியை வழங்கும் என உறுதி அளித்தார் நரேந்திர மோடி. மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்; படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
வெதர்மேன்: இதற்கிடையே அங்கே எல்லையில் மழை இப்போது எப்படி இருக்கிறது.. வரும் நாட்களில் மழை தொடருமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகாவின் குடகு, ஹாசன், சிக்மகளூர், கேரளா, நீலகிரி, வால்பாறை, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை குறையும்.
அதிதீவிர கனமழை: இவ்வளவு பெரிய அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. கனமழை பெய்யும் என எதிர்பார்ப்பு இருந்தது உண்மை தான். ஆனால் எப்படியோ கேரளா, வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை மேகங்கள் தொடர்ந்து இருக்கின்றன. கேரளாவில் பருவமழை தொடங்கியது முதல் பெய்த அதிதீவிர கனமழை என்றால் அது இதுதான். வால்பாறை அணைகள் மற்றும் நீலகிரி அணைகளில் அதிக நீர்வரத்து உள்ளது. கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பொதுவாக மழை வரும் போது கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மழை மேகங்கள் வலுவிழக்கும். அதன் பிறகு மற்றொரு மழை மேகங்கள் உருவாகும்.. ஆனால், இப்போது அப்படி இல்லை மழை மேகங்கள் வலுவிழக்கவில்லை. கனமழை தொடர்ந்து பெய்தே வந்துள்ளது.. இது அரிய நிகழ்வு என்று குறிப்பிட்ட வெதர்மேன், நிலச்சரிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications