ஆமா.. கேரளாவில் மட்டும் கொரோனா கேஸ் சட்டுன்னு குறையலியே ஏன்? விஷயம் இதுதான்
திருவனந்தபுரம்: கடந்த சில வாரங்களில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 கேஸ்கள் பதிவு செய்யும் ஒரு சில மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாக உள்ளது.
ஜூலை 8 ஆம் தேதி, 13,772 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நாட்டின் பல பகுதிகளில், தினசரி கேஸ்லோட் படிப்படியாக குறைந்து வருகிற நிலையிலும் கேரளா எப்போதுமே அப்படியே தொற்றுகளை பதிவு செய்து வருகிறது.
உதாரணமாக, மகாராஷ்டிரா, கேரளாவை ஒப்பிட்டால் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகவும் பெரிய மாநிலம். ஆனால், ஜூலை 8 அன்று 9,083 கொரோனா கேஸ்கள்தான் அங்கு பதிவாகின.

கேரளாவில் கேஸ்கள்
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்படி, ஜூலை 8 ஆம் தேதி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் மொத்த செயலில் உள்ள கேஸ்கள், அதாவது ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை, முந்தைய நாளை விட, 333 ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் கேரளாவின் செயலில் உள்ள கேஸ்கள் 3,823 ஆக உயர்ந்தன. இது அந்த நாளில் நாட்டிலேயே அதிகமானதாகும். மகாராஷ்டிராவுடன் ஒப்பிடும்போது கேரளாவில் இறப்புகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதையும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ரெக்கவரி ரேட் அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கேரளாவில் குறையவில்லையே
மே 1 முதல் 7 வரை, நாடு முழுவதும் நோய்த்தொற்றுகள் உச்சத்தில் இருந்தபோது, கர்நாடகா மற்றும் கேரளாவில் முறையே 46,045 மற்றும் 36,239 கேஸ்கள் பதிவாகியுள்ளன. கடந்த சில நாட்களில், ஜூன் 30 முதல் ஜூலை 6 வரை, கர்நாடகா மற்றும் கேரளாவில் சராசரியாக தினசரி, முறையே, 2,646 மற்றும் 12,226 கேஸ்கள் பதிவாகியுள்ளன. அதாவது கர்நாடகாவில் கேஸ் எண்ணிக்கை குறைந்துள்ளது. கேரளாவில் ஓரளவுக்கு அதிகமாகவே உள்ளது.

கேஸ்களுக்கு காரணம் என்ன?
வீழ்ச்சிக்கு மாறாக, கேரளாவில் ஒரு நிலையான கேஸ் எண்ணிக்கை இருப்பதற்கு, இரண்டு காரணங்களால் இருக்கலாம் என்கிறார், தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில். அதில் ஒன்று, கேரள மக்களின் விழிப்புணர்வு. அறிகுறிகள் ஏற்பட்டாலே, அதை மறைத்து வைப்பதை விட, தங்களை சோதித்துப் பார்க்கவே அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்தால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஆனால் கேஸ் பதிவு செய்யப்படும். எனவே கேஸ் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிறார் அவர்.

நகர்ப்புற பகுதிகள்
டெல்லி மற்றும் கர்நாடகா போன்ற இடங்களில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்ததற்கும், வேகமாக சரிவடைந்ததற்கும் காரணம், அங்குள்ள நகர்ப்பகுதிகள் மக்கள் அடர்த்தி அதிகமாக இருந்ததுதான். தொற்று நோய் ஏற்படும்போது அது வேகமாக பரவியது. எனவே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக போனது. இப்போது அங்கே பெரும்பாலானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிட்டதால், பரவ ஆள் இல்லாமல் நோய் பாதிப்பு குறைகிறது. தீவிரமான லாக்டவுனும் அங்கு கொரோனா குறைய காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஸ்பைக் இல்லை
அதேநேரம், கேரளா அப்படியில்லை. 2வது அலையின்போது, பெங்களூர், சென்னை, டெல்லி போல, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் கஷ்டப்படும் அளவுக்கு ஒரேயடியாக கேஸ் அதிகரிக்கவில்லை. அங்குள்ள மக்கள் சற்று சமூக இடைவெளியை பராமரிக்க ஏற்ற சூழ்நிலை இருப்பதும் காரணம். எனவே, இப்போது மெல்ல மெல்ல அது சமூகத்தில் பரவியபடியே உள்ளது. சராசரியாக நோய்த் தொற்று கேரளாவில் தொடர்ந்து பதிவாக இதுதான் காரணம்.












Click it and Unblock the Notifications