ரேஷன் கடை "பாய்க்கு" கல்யாணம்.. அந்த அழைப்பிதழை வாங்கி பார்த்தால்.. கேரளாவுக்கே மகிழ்ச்சி! ஆச்சரியம்
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமண நிகழ்வு, அம்மாநில மக்களையே கவர்ந்து வருகிறது.. இதற்கு காரணம், தன்னுடைய திருமண அழைப்பிதழை ரேஷன் கார்டு வடிவில் அச்சிட்டு அனைவருக்கும் வழங்கியிருக்கிறார் மணமகன்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
ஜோதிஷ் என்பவர், சிறு வயதில் அம்மாவுக்கு உதவுவதற்காக அடிக்கடி ரேஷன் கடைக்கு சென்று வந்துள்ளார். காலப்போக்கில் அவருக்கு 'ரேஷன் கடை பையன்' என்ற செல்லப் பெயர் கிடைத்துவிட்டது. இதனை நினைவுகூர்ந்த அவர், தனது திருமண அழைப்பிதழை ரேஷன் அட்டை ஸ்டைலில் அச்சிட, அது தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

திருமண நிகழ்வு: சமீபகாலமாகவே எத்தனையோ சம்பவங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில், திருமணத்துக்கு வைக்கப்படும் பேனர்கள், போஸ்டர்களும் ட்ரெண்டாகின்றன. நூதனமான முறையில் சிந்தித்து, இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்படுவதால், பொதுமக்களின் கவனத்தையும் இவை வெகுவாக ஈர்த்து விடுகின்றன.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2ம் தேதி, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இளங்கமங்கலம் கிராமத்தில், திருமணம் ஒன்று நடந்துள்ளது.. இதற்காக அச்சடிக்கப்பட்ட பத்திரிகைதான், பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
ரேஷன் கடை பையன்: மணமகன் பெயர் ஜோதிஷ்.. ரேஷன் கார்டு பாணியில், இந்த அழைப்பிதழை அச்சிட்டுள்ளார். சின்ன வயதிலிருந்தே, இவரது அம்மாவுக்கு, ஜோதிஷ்தான் கடைக்கு சென்று உதவி வருவாராம்.. தன்னுடைய அம்மாவுக்கு ரேஷன் வாங்கி தருவதும் ஜோதிஷ்தானாம். ஒருகட்டத்தில் இவரே ரேஷன் கடையை நடத்தி வந்துள்ளார்..
அதனால், அப்போதிருந்த அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், "ரேஷன் கடை பையன்" என்று செல்லமாக ஜோதிஷை அழைத்து வந்துள்ளனர். இப்போது திருமண நிச்சயமான நிலையில், பழையதை மறக்க கூடாது என்பதால், ரேஷன் கடை டிசைனிலேயே அழைப்பிதழை தயார் செய்துவிட்டார். ரேஷன் அட்டையில் இருப்பதை போலவே, இந்த அழைப்பிதழிலும் மணமக்கள் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.
அழைப்பிதழ்: இந்த அழைப்பிதழின் முதல் பக்கத்தில் மணமகன் மற்றும் திருமணத்தின் விவரங்கள் உள்ளன.. குறிப்பாக, மணமகனின் தாலுகா, வார்டு எண், வீட்டு எண் போன்றவை பதிவாகி உள்ளன.
ரேஷன் கார்டின் பின்புறத்தை திருப்பி பார்த்தால், நிஜமாகவே ரேஷன் கார்டை போலவே அத்தனை விவரங்களும் உள்ளதாம்.. அதாவது, குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் உறவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன... இந்த ரேஷன் கடையை, ஜோதிஷின் கொள்ளுத்தாத்தா பார்கவன் பிள்ளை முதன்முதலில் நடத்தி வந்துள்ளார்.. அவரது பெயரும் இந்த அழைப்பிதழில் உள்ளது.. அட்டை எண்ணுக்கு பதிலாக தொலைபேசி எண் அச்சிடப்பட்டுள்ளது.
மறக்க முடியாதது: ரேஷன் கடை என்பது ஜோதிஷின் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது இதிலிருந்து தெரிகிறது.. அந்த ரேஷன் கடை, ஜோதிஷின் திருமணத்தை உண்மையிலேயே மறக்கமுடியாததாக மாற்றியுள்ளது என்கிறார்கள் அக்கிராம மக்கள்.












Click it and Unblock the Notifications