ஆட்டோ வாங்க ரூ10,000, மாணவர்களுக்குTAB- திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் அறிவிப்பாகுமா?
சென்னை: சட்டசபை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் 100க்கும் மேற்பட்ட முக்கியமான வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றில் பெண்களுக்கு பேருந்து கட்டண சலுகை, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய வாக்குறுதிகள் நாளைய பட்ஜெட்டில் அரசின் அறிவிப்பாக இடம்பெறுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
சட்டசபை தேர்தல்களின் போது திமுகவின் தேர்தல் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இலவச டிவி அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனை தேர்தலில் வென்றதும் செயல்படுத்திக் காட்டினார் கருணாநிதி. அந்த கலைஞர் டிவி இன்றளவும் பல்லாயிரம் வீடுகளில் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது திமுகவின் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு பெரும் வரவேற்புக்குரியதாக இருந்தது. மக்களும் திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர். ஆனால் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலிலும் திமுக தேர்தல் அறிக்கை பெரும் மெனக்கெடலுடன் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டமாக திமுகவின் தேர்தல் அறிக்கை குழு சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தயாரிக்கப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் 100க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகள்
திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்!
கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும்!
முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.
சென்னையில் திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது.
கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும்.
சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய, சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.
குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க 'கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம்' கொண்டு வரப்படும்.
நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.
கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும்.
சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில், லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க, குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
முக்கியமான மலைக்கோவில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும், ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும்.
இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மசூதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் படி முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கும் உடனடி பணி நியமனம் செய்யப்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.
32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும்.
ஏழை மக்கள் பசி தீர, முதல் கட்டமாக 500 இடங்களில் 'கலைஞர் உணவகம்' அமைக்கப்படும்.
நடைபாதைவாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியமர்த்தி கால முறை ஊதியம் வழங்கப்படும்.
கலைஞர் காப்பீட்டு திட்டமும், வருமுன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும்.
தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும்.
கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு அலுவர்கள், முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி, ரூ.3 லட்சம் என்பது ரூ.5 லட்சம் ஆக்கப்படும்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும்.
பத்திரிகையாளர் மற்றும் ஊடகத் துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்.
பத்திரிகையாளர், ஊடகத்துறையினர் ஓய்வூதியமும் குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும்.
சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்!
ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்!
மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்களாக செயல்படும்.
ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 80 வயதுக்கு மேல் 20 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதனை 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும் வழங்குவோம்!
வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும்.
அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.
சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி வரும்.
புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும். கனிமங்கள், தாது மணல், மணல் ஆகிய தொழில்கள் அமைத்தும் டாமின் நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும்.
அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் கைக்கணினி வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் வை-ஃபை வசதி செய்து தரப்படும்.
அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 4000-ஆக உயர்த்தி வழங்கப்படும்!
உழவர் சந்தைகளுக்கு உயிரூட்டப்பட்டு, அது அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்!
நீர்ப்பாசனத் துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்!
நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திடச் சட்டம் கொண்டு வரப்படும்!
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் 10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்!
ஏழை - எளிய, சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
அ.தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீர்செய்ய பொருளாதார உயர்மட்டக் குழு அமைக்கப்படும்!
மீனவர் சமுதாயத்தினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
அம்மையார் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.
சென்னை நகரை வெள்ளப்பெருக்கத்தில் இருந்து பாதுகாக்க, சென்னைப் பெருநகர் வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும்!
வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய் வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
தமிழ் எழுத்து வரிவடிவம் சிதைக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்!
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலகநாடுகளை மத்திய அரசு வலிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பேண வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்.
மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
அரசு பள்ளி, கல்லூரி மாணவியர்க்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.
பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பு 25 லட்சமாக உயர்த்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
நரிக்குறவர், குருவிக்காரர், வேட்டைக்காரர், லம்பாடி, படுகர் சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி மாணவர்க்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்.
வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
புகழ்பெற்ற இந்துக் கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும்.
பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.
சென்னை சிறுசேரி பகுதியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத 16 முக்கிய வழித்தடங்களில் புதிய ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம்.
திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
வேலூர், கரூர், ஓசூர், இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
101. 100 நாட்கள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.
30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்.
இத்தனை வாக்குறுதிகளில் கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்., முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும், அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்; வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பேண வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என சில வாக்குறுதிகள் 100 நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பிரதான வாக்குறுதிகள் நாளைய பட்ஜெட்டில் அரசின் அறிவிப்பாக இடம்பெறுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.
தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. இருந்த போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே உறுதி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications