ஊட்டிக்கு இ பாஸ்.. ஆஹா ஆரம்பமே வேறலெவல்.. நீலகிரி மலையை மலைக்க வைத்த விண்ணப்பம்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு முதல் நாளிலேயே 21 ஆயிரத்து 500 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னை ஓஎம்ஆர் சாலையும், ரேடியல் சாலையும் காத்துவாங்கும் மே மாத சனி மற்றும் ஞாயிறுகள், ஊட்டி குன்னூர் சாலைகளை நிலைகுலைய வைக்கின்றன.. இது ஒஎம்ஆர் சாலையா அல்லது ஊட்டி சாலையா என்று யோசிக்கவேவைத்துவிடும். அந்த அளவிற்கு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற கோடைவாசல் தலமாகும்.. வெள்ளைக்காரர்கள் வாழ விரும்பிய சொர்க்கபுரியான ஊட்டியில் ஒரு நாளும் சூரியனின் தாக்கம் கடுமையாக இருக்காது. வெயில் என்றால் என்னவென்றுகேட்கும் நகரமாக ஊட்டி பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால் மிக்ஜாம் புயலில் சிக்கிய சென்னை போல், ஊட்டியும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெயிலில் சிக்கி தவித்தது.. நல்ல வேளையாக வருணபகவானின் என்ட்ரியால் தப்பி பிழைத்துள்ளது.ஊட்டியில் சூரியனின் உஷ்ணத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகையால் வந்த உஷ்ணம் மிக அதிகம்
நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில், கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அதாவது மூன்றில் ஒரு பங்கு மக்கள் வெறும் இரண்டு மாதத்தில் வருவதால், , கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தங்கும் இடம், கழிப்பறை உள்பட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.
அண்மையில் உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த தகவலின் படி, ஊட்டிக்கு தினமும் சீசன் நேரங்களில் கார், வேன் உள்பட மொத்தம் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வருகின்றன. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள தங்குமிடங்களில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 5 ஆயிரத்து 620 அறைகளும், அதற்கு தேவையான வாகன நிறுத்தங்களும் ஊட்டியில் இருக்கின்றன. இதுதவிர 12 இடங்களில் நிரந்தர வாகன நிறுத்துமிடங்களும் உள்ளன. ஒரே நேரத்தில் 20 ஆயிரம் வாகனங்கள் வரை வருவதால் மலைநகரமான ஊட்டி ஸ்தம்பித்து போய்விடுகிறது.. இதனால் அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்க்க முடியாமல் அதிருப்தி அடைகிறார்கள்.'
இதனிடையே போக்குவரத்து நெரிசலால் உள்ளூர் மக்களும் சிரமம் அடைகிறார்கள். இதை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இ-பாஸ் முறை நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் நீலகிரிக்குள் வரும் வெளிமாவட்ட, வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதற்காக நேற்று காலை 6 மணி முதல் https://epass.tnega.org என்ற இணையதளம் வெளியிடப்பட்டு, அதன் மூலம் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
முதல் நாளான இன்று 21,446 வாகனங்கள் நீலகிரிக்கு வர இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் பயணிக்க உள்ளனர். 518 தனியார் பஸ்கள், 466 மினி பஸ்கள், 15,787 கார்கள், 1,289 வேன்கள், 2,841 இருசக்கர வாகனங்கள், 545 வணிகம் தொடர்பான வாகனங்கள் என மொத்தம் 21,446 இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் எந்த தினத்தில் நீலகிரிக்குள் வர உள்ளது என்ற விவரம் வெளியாகவில்லை. இ-பாஸ் பெற்றவர்கள் இன்று முதல் ஜூன் 30-ந் தேதி வரை எந்த தினத்தில் வேண்டுமானாலும் வர வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications