கொடைக்கானலில் தேவதையின் தரிசனம்.. மயங்கி கிடக்கும் மலைகள்.. இப்படி பார்க்க சூரியனே தவம் இருக்கணும்
கொடைக்கானல்: கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலைகளை முத்தமிட்டபடி செல்லும் மேகங்கள், அவ்வப்போது சாரல் மழை.. கொடைக்கானல் அழகை இப்படி காண சூரியனே தவம் இருக்கிறது.
பெண் பேரழகியா, இயற்கை பேரழகியா என்றால் பதில் கண்டிப்பாக சொல்ல முடியாது. ஏனெனில் சண்டையே வந்துவிடும். மேற்கு தொடர்ச்சி மலையில் பேரழகின் உச்சமாக கொடைக்கானல் இப்போது இருக்கிறது. சூரியனை கண்டு கொதித்து போய் ஓடிவந்த மக்களை எல்லாம் ஏக்கப்பார்வையோடு பார்க்கிறது சூரியன்.. எல்லா இடத்திற்கும் இ பாஸ் இல்லாமல் போகும் சூரியன்.. அங்கு இப்போது இபாஸ் கூட எடுக்க காத்திருக்கிறது..

அங்கு சூரியனுக்கு கட்டுப்பாடுகளுடனே அனுமதி தருகிறது இயற்கை.. ஓங்கி அடிக்கக்கூடாது.. அவ்வப்போது சாரல் மழை, முத்தமிடும் மேகக்கூட்டங்கள்.. இதை எல்லாம் பார்த்து சூரியனே ஏங்குகிறது.. ஏப்ரலில் எப்படியாவது காப்பாற்று இறைவா என்று ஏங்கிய செடிகளும், கொடிகளும், மழையின் மாயாஜாலத்தில் யானை பலத்துடன் துள்ளி குதித்தபடி நிற்கின்றன.. தண்ணீருக்காக ஏங்கிய விலங்குகளும், அங்கு வாழும் மக்களும், அருவிகளில் கொட்டும் நீரால் ஆனந்தமாக இருக்கிறார்கள்..
இயற்கை ஒரு விசித்திரமானது..எல்லாவற்றையும் அள்ளித்தரும். ஆம் எல்லாவற்றையும் நீங்கள் கேட்காமலே தரும். அப்படித்தான் கொடைக்கானலுக்கு அள்ளித்தருகிறது. அங்கு தற்போது நிலவும் கால நிலையை பற்றி விமர்சிக்க வார்த்தைகள் போதாது.. கவிதைகளும் வரிகள் இல்லாமல் பாதியில் நின்றுவிடும். அப்படி ஒரு அழகுடன் இப்போது கொடைக்கானல் காணப்படுகிறது.
சர்வதேச சுற்றுலா தலமாக புகழ் பெற்று விளங்கும் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருவார்கள். கொடைக்கானலில் கடந்த ஏப்ரல் மாதம் குளுகுளு சீசன் தொடங்கிய நிலையில், இ-பாஸ் நடைமுறைக்கு முன்பு வரை சுற்றுலா பயணிகள் வருகை இயல்பாகவே இருந்தது.
ஆனால் இ பாஸ் நடைமுறையால் சில நாட்கள் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு மீண்டும் சீசன் களைகட்டியது. குளுகுளு சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் தற்போது அதிகமாக வந்த வண்ணம் உள்ளனர். நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நாளையுடன் பள்ளி விடுமுறை நிறைவுபெறுவதால், பெற்றோர்களுடன் குழந்தைகள் அதிக அளவில் கொடைக்கானலை காண குவிந்தனர்
கொடைக்கானல் மலைப்பகுதியில் வெயிலே தெரியவில்லை. நேற்று மாலை மேகங்கள் மலைகளை முத்தமிட்டபடி சென்றதால் இதமான சூழல் நிலவியது. அடிக்கடி சாரல் மழையும் பெய்தது. இதனை சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர்.
கோக்கர்ஸ்வாக் மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணாகுகை, பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications