தனுஷ்கோடி சுற்றுலா சென்றவர்களுக்கு ஆச்சரியம்... 60 ஆண்டுகளுக்கு பின் சம்பவம்.. வெளியே வந்த பாலம்
ராமேஸ்வரம்: உலக புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலா தலமான ராமேஸ்வரத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வருகிறார்கள். அதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட தென்மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். இதேபோல் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவரும் தினமும் வருகிறார்கள். அப்படி வரும் பலரும் தனுஷ்கோடி செல்வது உண்டு. இந்நிலையில் தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 60 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
ஒரு காலத்தில் தனுஷ்கோடி என்பது ராமேஸ்வரத்தை விடவும் புகழ் பெற்ற நகரமாக இருந்தது. இப்போது உள்ள ரயில் பாதையே தனுஷ்கோடிக்காக போடப்பட்டது தான். இலங்கைக்கு கூப்பிடும் தூரத்தில் உள்ள தனுஷ்கோடியில் 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு இரவில் நடந்த சம்பவம் அந்த நகரத்தை மோசமாக அழித்தது. தனுஷ்கோடியைத் தாக்கிய மிகக் கோரமான புயல் என்று கூறுவதைவிட சுனாமி என்று சொல்லலாம்.

1964ம் ஆண்டு ராட்சத அலை
1964ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி வங்காள விரிகுடாவில் உருவான சூறாவளிப் புயல், சுமார் 280 கி.மீ. வேகத்தில் வந்தது. இதனால் காற்றோடு ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்துள்ள தனுஷ்கோடியை கடுமையாக தாக்கியது. இவ்வளவு மோசமான புயலின் தாக்கத்தினால், சுனாமி போன்ற 40 முதல் 50 அடி உயரத்திற்கு (சுமார் 7 மீட்டர்) கொண்ட ராட்சத கடல் அலைகள் தனுஷ்கோடி நகரத்திற்குள் புகுந்தன.
ஒரே நாளில் காலியான தனுஷ்கோடி
இந்த ஆழிப்பேரலையும், சூறாவளிக் காற்றும் இணைந்து அன்றைய இரவு உறங்கிக் கொண்டிருந்த தனுஷ்கோடி மக்களை மொத்தமாக கடலுக்குள் மூழ்கடித்து கொன்றது.. தனுஷ்கோடியில் இருந்த ரயில் நிலையம், துறைமுகம், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், தபால் நிலையங்கள் என அனைத்தும் ஒரு நாள் இரவில் காலியாகின.
பயணிகள் ரயில்
அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில். புயலின் வேகத்தில், தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த அந்த ரயில் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டிருக்கிறது.. இதில் ரயில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 100க்கணக்கானோர் இறந்தார்கள். இந்த சம்பவத்தில் பல ஆயிரம் பேர் ஒரே நாளில் இறந்து போனார்கள். இன்று கம்பீரமாக உள்ள பாம்பன் ரயில் பாலமும் பலத்த சேதமடைந்தது. பாலத்திற்குள் தூண்கள் சரிந்து விழுந்தன.
தரைப்பாலம் மூழ்கியது
இந்த புயலின் போது, தனுஷ்கோடியில் இருந்த தரைப்பாலம் மூழ்குகிறது. சுமார் 60 வருடங்களாக தரைப்பாலம் கடலுக்குள் தான் இருக்கிறது. கடலில் அமைப்பையே அந்த புயல் தடம் மாற்றிவிட்டது. இதன் காரணமாக தரைப்பாலம் வெளியே தெரியவே இல்லை.. இதனிடையே புயலுக்குப் பிறகு, தனுஷ்கோடி நகரம் நிரந்தரமாகக் கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஒரே நாளில் அழிந்து போன தனுஷ்கோடியை "வாழத் தகுதியற்ற இடமாக" மத்திய அரசு அறிவித்தது.
60 ஆண்டுகளுக்கு பின் அதிசயம்
இன்று வரை தனுஷ்கோடியில் எந்தவிதமான நிரந்தர குடியிருப்புகளும் இல்லை.. அங்கு சுற்றுலா பயணிகள் கடந்த 20 வருடங்களாக மெல்ல மெல்ல வரத்தொடங்கினார்கள். கடந்த 15 ஆண்டுகளில் சுற்றுலா பயணிகள் மத்தியில் தனுஷ்கோடி மிகவும் புகழ் பெற்றது. அங்கு போடப்பட்ட சாலை, மற்றும் தனுஷ்கோடி காட்சி முனை, மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட அந்த பகுதிகள் முழுமையாக மக்களுக்க பிடித்து போனது. பலரும் ரசிப்பதற்காக தினமும் வருகிறார்கள். இந்நிலையில் கடல் அரிப்பால் 60 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தரைப்பாலம் இன்று வெளியே தெரிந்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications