கொடைக்கானலில் வரலாற்றில் இல்லாத சம்பவம்.. ஒன்றுபட்டு சாதித்த சுற்றுலா வாகன ஓட்டிகள்
கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் பில்லர்ராக், குணாகுகை, பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்க ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வனத்துறையினரை கண்டித்து சுற்றுலா வாகன டிரைவர்கள் போராட்டம் நடத்தியதால் 10 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. எனினும் ஒன்றுபட்டு அவர்கள் நடத்திய போராட்டத்தால் அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளது.
கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலம் என்பதால், பலரும் ஆர்வமுடன் வருகிறார்கள். சென்னையில் இருந்தும், பெங்களூரில் இருந்தும், கொச்சியில் இருந்து பல இளைஞர்கள் தினமும் வருகிறார்கள். கோடை விடுமுறை காரணமாக தமிழ்நாடு முழுவதில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள், கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களையும் சுற்றிப்பார்க்கிறார்கள்.

அந்த வகையில் கொடைக்கானல் வனப்பகுதியில் பில்லர்ராக், குணாகுகை, பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த இடங்களுக்கு செல்ல தற்போது ஒரே இடத்தில், அதாவது பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் 'கியூ-ஆர் கோடு' முறையில் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை அந்தந்த சுற்றுலா இடங்களின் நுழைவு வாயிலில் சாதாரண முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூர் சுற்றுலா வாகன டிரைவர்கள், உரிய நேரத்துக்குள் சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகளுக்கு காண்பிக்க முடியாமல் தினமும் அவதிப்பட்டார்கள்.
எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய முறைப்படி அந்தந்த சுற்றுலா இடங்களின் நுழைவு வாயிலில் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று சுற்றுலா வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் சார்பில் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கொடைக்கானல் சுற்றுலா வாகன டிரைவர்கள் ஏராளமானோர் நேற்று காலை 7 மணி அளவிலேயே வனப்பகுதி சுற்றுலா இடங்கள் செல்லும் நுழைவுவாயில் பகுதியிலும், சுற்றுலா இடங்களுக்கு செல்லும் பிரதான சாலையான பாம்பார்புரம் பகுதியிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பின்னர் வாகன டிரைவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதில், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தது வந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டம் நடத்திய வாகன டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு நுழைவு கட்டணமின்றி சென்று வரலாம் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
அதன்பிறகு சமரச பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு வாகன டிரைவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். அதன்பிறகு சுற்றுலா வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் அங்கிருந்து ஊர்ந்தபடி சென்றனர். சுற்றுலா வாகன டிரைவர்கள் சுமார் 10 மணி நேரம் நடத்திய இந்த போராட்டத்தால் கொடைக்கானல் நகரமே ஸ்தம்பித்தது.
நாளை மறுநாள் முதல் 5 இடங்களில் டிக்கெட் வழங்க ஏற்பாடு
கொடைக்கானலில் சுற்றுலா வாகன டிரைவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை கட்டணம் இல்லாமல் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம். மேலும் வாகனங்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வகையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் கொடைக்கானல் பஸ்நிலையம், கோக்கர்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா உள்பட 5 இடங்களில் வனத்துறை சார்பில் கியூ-ஆர் கோர்டு மூலம் டிக்கெட் வழங்கும் வசதி அமல்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications