அனலுக்கு மத்தியிலும் ஆர்ப்பரிக்கும் அருவி.. தமிழ்நாட்டில்தான் இருக்கு.. கோடையில் ஜில் ஆக செம ஸ்பாட்
நெல்லை: வெப்ப அலை வீசும் இந்த கோடை காலத்திலும் ஜில்லென்று ஒரு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிக்கொண்டு இருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் வெயிலுக்கு இதமாக குளியல் போட்டுக் கொண்டு இருக்கும் இந்த அருவி எங்கே உள்ளது? எப்படி போக வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் பலரும் கோடை வாசஸ்தலங்களுக்கு விசிட் அடித்து வருகிறார்கள். கோடை வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு சென்று கொஞ்சம் ஆறுதல் அடைந்து விடுகிறார்கள்.

அகஸ்தியர் அருவி: அடிக்கிற வெயிலுக்கு ஜில்லென்று ஒரு அருவியில் குளித்தால் எப்படி இருக்கும் என நினைத்தாலும் இந்த வெயில் காலத்தில் அருவியில் எங்கே தண்ணீர் கொட்டப்போகிறது என நினைக்கிறீர்களா... தமிழ்நாட்டிலே அப்படியான ஒரு அருவி இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் அதுபற்றித்தான் இங்கே பார்க்கிறோம்.
மேற்கு தொடர்ச்சி மலையில்: அருவி என்றாலே நம் நினைவிற்கு வருவது குற்றாலம் தான். கோடைக்காலங்களில் குற்றால அருவி வறண்டு கிடக்கும். இதனால், சுற்றுலாப்பயணிகள் அந்தப் பக்கமே தலை வைத்து படுப்பது கிடையாது. ஆனால், அதே தென்காசிக்கு சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள பாபநாசம் அருகே அகஸ்தியர் அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த அருவியில் தான் ஆண்டு முழுக்க நீர் ஆர்ப்பரித்துக் கொட்டிக்கொண்டு இருக்கிறது.
சுற்றுலாப் பயணிகள் கூட்டம்: 100 டிகிரிக்கு வெயில் உக்கிரம் காட்டிக்கொண்டு இருந்தாலும் கூட இந்த அருவியில் தண்ணீர் கொட்டிக்கொண்டு இருக்கிறது. இதனால் கோடை வெயிலில் இதமாக இந்த அருவியில் குளியல் போட சுற்றுலாப்பயணிகள்படையெடுத்து வருகிறார்கள். அதிலும் வார இறுதி நாட்களில் இந்த அருவியில் குளியல் போட சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆண்டு முழுக்க தண்ணீர் கொட்டுவதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்து மட்டும் இன்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பயணிகள் இங்கே வருகை தருவதை பார்க்க முடிகிறது. அகஸ்தியர் அருவிக்கு ஆன்மீக அருவி என்ற ஒரு பெயரும் உள்ளது.
அகஸ்தியர் அருவிக்கு செல்வது எப்படி?: இந்த அருவி முனிவரின் அகஸ்தியத்திற்கு முன் சிவன் மற்றும் பார்வதி தோன்றிய இடத்தில் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. இதனால் இந்த அருவிக்கு ஆன்மீக அருவி என்ற பெயரும் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் அகஸ்தியர் அருவி உள்ளது. ரயில் மூலம் செல்வது என்றால் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலே உள்ளது.
அகஸ்தியர் அருவிக்கு செல்லும் முன்பாக சுற்றுலாப்பயணிகளை பாபநாசம் செக்போஸ்டில் வனத்துறையினர் சோதனை செய்த பிறகே அனுமதி அளிப்பார்கள். சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்காத வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுவார்கள்.












Click it and Unblock the Notifications