மூணாறில் டபுள் டக்கர் பஸ்.. தேனி சாலையில் உச்சி மலையில் மிகப் பெரிய ரிஸ்க் எடுக்கிறதா கேரளா?
தேனி: மூணாறில் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உச்சிமலையில் பார்க்கவே ரம்மியமான பசுமையான தேயிலைக் காடுகளை ஊடுருவிச் செல்லும் அற்புதமான மலைச்சாலையில் டபுள் டக்கர் பஸ் ஓடும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்க்கும் போது, மிகப்பெரிய கொண்டை ஊசி வளைவுகளில் கேரளா சுற்றுலாத்துறை ஏன் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்..
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோடைவாசல் தலமான மூணாறு அமைந்துள்ளது. மூணாறு நகரம் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையது. ஏனெனில் அங்குள்ள மக்களில் தமிழர்கள் மிக அதிகம். தமிழர்கள் தான் பூம்பாறை, தேவிகுளம், மூணாறு பகுதிகளில் அதிக அளவில் வசிக்கிறார்கள்.

தேயிலை தோட்டங்கள், ஏலக்காய் தோட்டங்கள் பல தமிழர்களுக்கு சொந்தமானது. இதில் மூணாறை பொறுத்தவரை சுற்றுலா நகரம் என்பதால் ஏராளமான சுற்றுலா விடுதிகள் உள்ளன. சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.இதில் டாப் ஸ்டேசன், கொழுக்குமலை, ராமக்கல் மேடு போன்றவை தமிழக எல்லையில் உள்ளன.
மூணாறில் சுற்றுலா தொழிலை ஊக்குவிக்க அம்மாநில சுற்றுலா துறை பல்வேறு வளர்ச்சிதிட்ட பணிகளை ஆண்டு முழுவதும் மேற்கொண்டு வருகிறது.மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கேரளாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் இடம் என்றால், அது மூணாறு தான். மூணாறுக்கு தேனியில் இருந்து மிக அற்புதமான சாலை அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேரள எல்லை ஆரம்பமாகும் போடி மெட்டுவில் இருந்து மூணாறு வரை 3 பேருந்துகள் விலகி செல்லும் வகையில் உலகத் தரத்திலான மலைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், ஊட்டியில் கூட இப்படி ஒரு அற்புதமான சாலை இன்று வரை கிடையாது. மழைநீர் வடிகால் வசதியுடன் மூணாறு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூணாறில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக டபுள் டக்கர் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நல்ல ஆப்சன்தான்.. ஆனா பஸ் உயரம் அதிகம், அதனால சென்டர் ஆஃப் கிராவிட்டி வழக்கத்தை விட மேலயா இருக்கும். மலை ரோடுக்கு இது எல்லாம் ரொம்ப ரொம்ப ரிஸ்க்கி.. ஒரு வளைவுல ஒரு சின்ன தப்பு கூட அப்படியே கமுத்திடும் https://t.co/a6TFWB3ece
— வெங்கட் (@iVenpu) February 11, 2025
நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பேருந்தில், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் மூணாறு மலைச்சாலையை பொறுத்தவரை மிகவும் வளைந்து வளைந்து செல்லும் சவாலான சாலை. வனவிலங்குகள் அதிகம் வந்து செல்லும் ரிஸ்க் அதிகம் உள்ள சாலையாகும். இந்த சாலையில் திடீரென வாகனங்கள் பிரேக் போட்டால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று நெட்டிசன்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கேரள அரசு ஏன் இப்படி ரிஸ்க்கான இடத்தில் டபுள் டக்கர் பேருந்துகளை அறிமுகம் செய்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

வெங்கட் என்ற நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "இது நல்ல ஆப்சன்தான்.. ஆனா பஸ் உயரம் அதிகம், அதனால் சென்டர் ஆஃப் கிராவிட்டி வழக்கத்தை விட மேலாகவே இருக்கும். மலை ரோடுக்கு இது எல்லாம் ரொம்ப ரொம்ப ரிஸ்க்கி.. ஒரு வளைவுல ஒரு சின்ன தப்பு கூட அப்படியே கமுத்திடும்" என்று கூறியுள்ளார். இந்த கருத்தை பலரும் அமோதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications