கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளம்.. தவறினால் நொடியில் முடிந்துவிடும் எல்லாம்.. மிரள வைத்த காட்சி
கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் கோடை விழா களைகட்டிவருகிறது. படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக இருக்கிறார்கள். அதேநேரம் கொடைக்ககானலை ஒட்டியுள்ள கிராமங்கள் கனமழையால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கயிற்றை கட்டி ஆபத்தான முறையில் காட்டாற்று வெள்ளத்தை கடக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் அருமையாக இருக்கிறது. இதனை அனுபவிக்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதுதவிர வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.

சுற்றுலா பயணிகளுக்காகவே கொடைக்கானலில் கடந்த 17ம் தேதி மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. இதையடுத்து பிரையண்ட் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தார்கள். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்ததால் கொடைக்கானல் நகரில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகையால் கொடைக்கானல் நகரமே களைகட்டியது. பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான பூக்களை கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இதேபோல் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ரசித்தனர். இதேபோல் நட்சத்திர ஏரியில் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றை பார்த்து ரசித்தபடி சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அடிக்கடி சாரல் மழை மற்றும் மேகக்கூட்டங்கள் வந்து முத்தமிட்டபடி சென்றதால் நேற்று சுற்றுலா பயணிகள் மிகவும் சந்தோஷமாக கிளைமேட்டை ரசித்தனர்.

அதேநேரம் கொடைக்கானலை ஒட்டிய கிராம பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை மூங்கில்காடு அருகே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கால் கிராமம் துண்டிக்கப்பட்டது. இதனால் கிராமத்தில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் அவதிப்பட்ட மக்கள் ஆற்றை கடக்க கயிற்றை கட்டி ஆபத்தான முறையில் கடந்தனர். ஆற்றில் அபாயகரமான அளவிற்கு வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், அதை கயிறு கட்டி கிராம மக்கள் கடந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

இதனிடையே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காட்சிகள் ஊடகங்களில் இன்று காலை வெளியானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மூங்கில் காடு மக்களை மீட்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications