நீலகிரியில் யானை வழித்தடத்தில் உள்ள சொகுசு விடுதிகள்.. 15 நாட்களுக்குள் இடித்து அகற்றுமாறு நோட்டீஸ்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் யானை வழித்தடத்தில் உள்ள 35 தனியார் தங்கும் விடுதிகளை 15 நாட்களுக்குள் இடித்து அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நோட்டீஸ் நீலகிரி மாவட்ட சுற்றுலா விடுதி உரிமையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எந்த பகுதியில் எந்த விடுதிகள் அகற்றப்பட உள்ளது என்பதை பார்ப்போம்.
நீலகிரி மாவட்டத்தில் பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் யானை வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது. மேலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் வனப்பகுதிகளில் யானைகளுக்கான வழித்தடம் துண்டிக்கப்பட்டு உள்ளதாக கூறி கடந்த 2008-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்யுமாறு 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நீலகிரி மாவட்டம் பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு யானை வழித்தடத்தில் உள்ள 38 தங்கும் விடுதிகளை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது. அதன்படி 38 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே யானை வழித்தட வழக்கில் நீலகிரி மாவட்ட மாவட்ட நிர்வாகமும், தமிழக வனத்துறையும் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கி இருப்பதாக விடுதி உரிமையாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளையும், அதன் உரிமையாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்ததை அடுத்து, தங்கும் விடுதிகள் குடியிருப்புக்கான உரிமத்தை பெற்று கட்டப்பட்டு வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாகவும், அவற்றை இடிக்கவும் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இதனிடையே ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான விசாரணை குழுவின் உத்தரவுப்படி, மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 11 தங்கும் விடுதிகள், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை, அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்றி கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட நிர்வாகம் பதிவு தபால் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் நீலகிரி மாவட்ட சுற்றுலா விடுதி உரிமையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications