கொடைக்கானல் சொகுசு விடுதிகளில் மீண்டும் இப்படியா.. தேடி வரும் இளைஞர்கள்.. அதிர்ந்த அதிகாரிகள்
கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் கிராமத்தில் தங்கும் விடுதிகளில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் வைத்திருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில இடங்களில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் விநியோகம் செய்வது அடிக்கடி நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதேநேரம் இளைஞர்கள் சிலர் கொடைக்கானலின் இயற்கை அழகையும் தாண்டி, போதைக்காளானை தேடி வருகிறார்கள். போதைக்காளான் என்பது கொடைக்கானல் பகுதியிலேயே அபூர்வமாகவே கிடைக்கும். கொடைக்கானல் சொகுசு விடுதிகளில் தங்கி, கஞ்சா, போதைக்காளான் பயன்படுத்த வரும் இளைஞர்களுக்காக சில கும்பல்கள் இங்கு உள்ளன. இவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் நடக்கிறது. கொடைக்கானல் போதைக்காளானை கொரியரில் எல்லாம் அனுப்பி ஒரு கும்பல் சில மாதங்கள் முன்பு கைதானது. அந்த அளவிற்கு கொடைக்கானல் போதைக்காளான் மீது இளைஞர்கள் பைத்தியமாக உள்ளனர். ஆனால் அது உயிருக்கே ஆபத்தானது ஆகும்.

இந்நிலையில் நேற்று கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் கிராமத்தில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவராம் தலைமையில் போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். கூக்கால் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் (காட்டேஜில்) நடத்திய சோதனையில் இதே பகுதியைச் சோ்ந்த வீரணன் மகன் தனராஜா (33)விடம் போலீஸாா் சோதனையிட்டனா்.அப்போது அவா் 60 கிராம் போதைக் காளான், 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார். இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
இதேபோல் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை பகுதியில் அனுமதியின்றி சொகுசு விடுதி செயல்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவராம் தலைமையில் வட்டாட்சியா், காவல் துறை அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினா். அப்போது அங்குள்ள ஒரு சொகுசு விடுதியின் உரிமையாளரான நிக்சன் மோசஸிடம் போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் அந்த விடுதி பல ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விடுதியை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தார்கள்.
இதுகுறித்து கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவராம் கூறும் போது, கொடைக்கானல் பகுதிகளில் அனுமதி பெறாமல் சொகுசு விடுதிகள் நடத்தப்படுவதாகவும், இவற்றில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்தன. எனவே அனுமதி பெறாமல் சொகுசு விடுதிகளை நடத்தக் கூடாது. மேலும் 'ஹோம் ஸ்டே' என்ற பெயரிலும் அனுமதி பெறாமல் விடுதிகளை நடத்தக் கூடாது. இவ்வாறு நடத்தப்படுபவை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே வட்டக்கானல் பகுதியில் மூன்று சொகுசு விடுதிகள் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. சோதனை தொடரும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications