மலைப்பாம்பை நெருங்கிய மரணம்.. மயக்க மருந்து செலுத்தி சிகிச்சையளித்து காப்பாற்றிய டாக்டர்கள்.. சபாஷ்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மீன்பிடி வலையில் சிக்கி 4.2 கிலோ எடையுடன் 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு உயிருக்கு போராடியது. இதையடுத்து அந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டதோடு, கால்நடை டாக்டர்கள் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்து காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக நம் ஊர்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் மாடு, ஆடு, நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். பாம்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது என்பது அபூர்வமான விஷயம்.
ஆனால் திருநெல்வேலியில் உயிருக்கு போராடிய பாம்புக்கு அதுவும் மலைப்பாம்புக்கு சிகிச்சை அளித்து டாக்டர்கள் காப்பாற்றி உள்ளனர். இந்த சம்பவம் எங்கே நடந்தது? எப்போது நடந்தது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
வலையில் சிக்கிய பாம்பு
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் மீன்பிடி வலையில் பாம்பு ஒன்று சிக்கி கொண்டது. பாம்பின் உடலில் மீன்பிடி வலை சுற்றி கொண்டது. இதனால் பாம்பு எவ்வளவு முயன்றும் வலையை விட்டு செல்ல முடியவில்லை. இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த பாம்பை அவர்கள் கண்ணாடி விரியன் பாம்பு என்று நினைத்தனர்.
பாம்பின் உடலில் காயம்
இதனால் அவர்கள் அருகே செல்லவே அஞ்சினர். அதோடு, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மூலக்கல் வனத்துறை ரேஞ்சர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வலையில சிக்கிய பாம்பை மீட்டனர். அப்போது பாம்பின் உடலில் வலை சுற்றி காயங்கள் ஏற்பட்டு இருந்தது.
மலைப்பாம்பு
மேலும் அது கண்ணாடி விரியன் பாம்பு இல்லை எனவும், மலைப்பாம்பு தான் என்றும் உறுதி செய்தனர். பிறகு உடனடியாக மலைபாம்பு திருநெல்வேலி கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டீன் எட்வின்,டாக்டரும், உதவி பேராசிரியர்களுமான ஷிஜு சைமன், கிருஷ்ணவேணி ஆகியோர் மலைப்பாம்புக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் அந்த மலைப்பாம்பு உயிர் பிழைத்தது.
மயக்க மருந்துடன் சிகிச்சை
இதுபற்றி அவர்கள் கூறுகையில், ''மலைப்பாம்பு 4.2 கிலோ எடையுடன் இருந்தது. மொத்தம் 6 அடி நீளத்தில் இருந்தது. பாம்பின் உடலில் மீன்பிடி வலை சுற்றியதால் தலைக்குக் கீழே சுமார் ஒரு அடி இடைவெளியில் உடல் பகுதியில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது. மீன்பிடி வலை மிகவும் இறுக்கமாக சுற்றியிருந்ததால் பாம்பின் தோல் கிழிந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பாம்பிற்கு மயக்க மருந்து வழங்கப்பட்டு உடலில் சிக்கியிருந்த வலை அகற்றப்பட்டது. பாம்புவிற்கு டியூப் வழியாக நீரேற்ற கரைசல், அன்டிபயாடிக்ஸ் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டது'' என தெரிவித்துள்ளனர். இந்த மலைப்பாம்பு உயிர் பிழைத்ததை தொடர்ந்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குவியும் பாராட்டு
மீன்பிடி வலையில் சிக்கி உயிருக்கு போராடிய மலைப்பாம்புக்கு சிகிச்சை வழங்கி காப்பாற்றிய டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications