கொழுக்குமலை டிரக்கிங் .. சுற்றுலா பயணிகளுக்கு கெட்ட செய்தி .. கேரள ஹைகோர்ட்டில் பரபரப்பு அறிக்கை
திருவனந்தபுரம்: தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள கொழுக்குமலையில் சுற்றுலா பயணிகள் 'டிரக்கிங்' செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. டிரக்கிங் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்தால் குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு டிரக்கிங் போக முடியாத நிலை ஏற்படும்.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் சூரியநல்லி அருகே கொழுக்குமலை என்ற அழகிய கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்திற்கு கேரளா வழியாகத்தான் செல்ல முடியும் . ஆனால் இது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவுக்கு உட்பட்டது. போடிமெட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில்தான் சூர்யநெல்லி அமைந்துள்ளது. அங்கிருந்து ஜீப்பில் பயணித்தால் கொழுக்குமலையை அடையலாம்.

இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பச்சை பசேலென இருக்கும் இந்த இடம் தான் ஆசியாவின் மிக உயரமான தேயிலை தோட்டம் அமைந்துள்ள பகுதியாகும். சூரிய உதயத்தை இங்கு காண கோடி கண்கள் வேண்டும். மூணாறு வரும் அத்தனை பேரும் கொழுக்குமலைக்கு கண்டிப்பாக வந்து செல்வார்கள்.
கொழுக்குமலைக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொழுக்குமலைக்கு வந்து செல்கிறார்கள். இந்த பகுதி டிரக்கிங் செல்வதற்கு உலக புகழ் பெற்றது. மிகவும் புகழ் பெற்ற டிரக்கிங் தளமான கொழுக்குமலைக்கு தினசரி ஏரளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்நிலையில் அண்மையில் மூணாறு பகுதியில் அரிக்கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வேறு பகுதிக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது ஒரு ஆய்வுக்குழுவையும் கேரள உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது.

அந்த குழு யானைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதன்படி ஏரி, அணைகளில் படகு சவாரி நடத்தப்படுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மனநிலை பாதிக்கப்படுவதாக தெரிவித்தது. இதன்படியே சில நாட்களுக்கு முன்பு ஆணை இரங்கல் அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
ஆணை இரங்கலில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில். கொழுக்குமலை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் 'டிரக்கிங்' செல்ல தடை விதிக்க வேண்டும் என்று எர்ணாகுளத்தில் உள்ள கேரள உயர்நீதிமன்றத்தில் ஆய்வுகுழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், கொழுக்குமலை அடிக்கடி மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்பதுடன் வனவிலங்குகள் அதிக அளவில் வாழும் பகுதியாகும். சுற்றுலா பயணிகள் 'டிரக்கிங்' செல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. எனவே 'டிரக்கிங்' செல்ல தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழுக்குமலையில் 'டிரக்கிங்' செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் ஜீப் டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று சூரியநெல்லி பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். ஆய்வுக்குழு தனது அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications