Vaigai Dam Water Level Today | வைகை அணை நீர்மட்டம் இன்று
வைகை அணை வரலாறு:
1957 ஆம் ஆண்டு காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது, மக்களை சந்திக்க தேனிக்கு சென்று இருந்தார். அப்பொழுது எம்.எல்.ஏ என்.ஆர் தியாகராஜன் முதல்வர் காமராஜரிடம் , ஆண்டிபட்டி கால்வாய் வழியே வரும் ரயிலின் சரக்குகளை சிலர் கொள்ளையடித்து விடுகின்றனர் என்றும், இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்றும் கேட்டுள்ளார். இதனை கேட்ட காமராஜர், சிறிது நேரம் யோசித்து விட்டு , கலெக்டரை கூப்பிட்டு இப்பகுதியில் ஓடும் முல்லைப்பெரியாறு மற்றும் வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வேயை உடனே எடுத்து எனக்கு அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட எம்.எல்.ஏ என்.ஆர் தியாகராஜன் மனதிலோ, என்னடா இது, திருட்டுக்கு வலி சொல்ல சொன்னால், இவர் அணை கட்ட சொல்கிறாரே என்று குழப்பம் வந்தது.
தன் குழப்பத்தை தீர்க்க, காமராஜர் அய்யாவிடமே போய், திருட்டுக்கு முடிவு கட்ட எப்படி அணை கட்டுவது சரியாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு காமராஜர் , திருட்டு ஏன் நடக்கிறது என்றால் கொள்ளையடிப்பவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. ஆனால் இந்த அணையை கட்டினால் விவசாயம் வளரும், அவர்களுக்கு வேலையும் , பணமும் கிடைக்கும் , அதற்காக தான் அணை கட்ட சொன்னேன் என்றார் காமராஜர். அந்த மாதமே, கலெக்டர் கொடுத்த சர்வே ரிப்போர்ட் வர, அதில் இந்த அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமமே நீரில் மூழ்கும் அபாய சூழல் உருவாகும் என்று ஆய்வு அறிக்கையில் சொல்லபட்டு இருந்தது.
இதனால் காமராஜர், குன்னூர் கிராம மக்களின் நலனை கருதி அவர்களுக்கு மாற்று இடமும், தக்க நஷ்ட ஈடும் வழங்க உத்தரவு பிறப்பித்தார். பின்பு வைகை அணை கட்ட பணிகள் துவங்கி, 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டில் ஜனவரி 29 ஆம் நாள் காமராஜர் அவர்களால் வைகை அணை திறந்து வைக்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் துவங்கப்பட்ட வைகை அணை இன்று வரை லட்சக்கணக்கான ஏக்கர் பாசன வசதிக்கும், 3 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.
எங்கு உள்ளது வைகை அணை?
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 7கி.மீ தொலைவில் உள்ள நரசிங்கபுரத்தில் வைகை அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் மூலம் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு விவசாயத்துக்குத் தேவையான நீரையும், மதுரை மற்றும் ஆண்டிப்பட்டி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது வைகை அணை?
வைகை அணை (Vaigai Dam) என்பது தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டிக்கு அருகே பாயும் வைகை ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். நிலக்கோட்டை அருகில் உள்ள பேரணை, மதுரை விரகனூர் மதகு அணை, பார்த்திபனூர் அணைக்கட்டு போன்றவை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த பிற அணைகளாகும்.
வைகை அணை முழு கொள்ளளவு விவரம்:
வைகை அணையின் ஆழம் என்பது 21.64மீ (71அடி). இந்த வைகை அணையின் மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன மீட்டர் (172 மில்லியன் கன அடி). வைகை அணை 111அடி உயரம் உடையது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும்.
வைகை அணை வானிலை:
ரம்மியமான இயற்கை சூழலின் மத்தியில் இந்த வைகை அணை அமைந்துள்ளதால் இங்கு இதமான குளிர் காற்று எப்போதும் வீசும். சில சமயங்களில் குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும் கூட குளிர்ச்சியான காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் வருகை எப்பொழுதும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் .
வைகை அணை பூங்கா:
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கு ஏற்ப வைகை அணையின் இருபுறமும் கண்கவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களுக்குச் செல்ல வேண்டுமெனில் சுற்றுலா பயணிகள் வைகை அணையின் முன்புறமுள்ள சிறிய பாலத்தின் வழியே கடந்து வர வேண்டும். இந்தப் பூங்காவில் சின்னச்சிறு குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டுத் திடல்களும் இதர பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
மேலும் இங்கு உள்ள ஒரு பூங்காவில் செயற்கை அமைப்பில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செய்யப்பட்டுள்ளது। இந்த தண்ணீரானது ஒரு சில தூரம் வரை சென்று கடைசியில் சிறிய அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து, இறுதியில் அந்த தண்ணீர் ஒரு அரக்கன் வாயின் வழியே வெளியேறும்படி செய்யப்பட்டுள்ளது।
செயற்கை வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் முக்கிய விடுமுறை நாட்களில் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பார்க்க முடியும்.
வைகை அணை - மிருகக் காட்சி சாலை:
வைகை அணை பூங்காவை அடுத்து ஒரு மிருகக்காட்சி சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையைப் பார்வையிட தனிநபர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்ற காரணத்தால் இங்கு ஒரு சில பறவைகளும், விலங்கினங்களும் தான் உள்ளன. முயல், எலி, மான், ஒரு சில பறவைகள் என்று வெளியில் திரியும் உயிரினங்களே இங்கு காணப்படுகின்றன.
நீர்மின் உற்பத்தி நிலையம்:
வைகை நீர்மின் உற்பத்தி திட்டமும் இந்த அணையில் இயங்கி வருகிறது. மேலும் அணைக்கருகிலேயே தமிழ்நாடு விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. இந்த மையமானது நெல், பருத்தி, உளுந்து மற்றும் கொள்ளு போன்ற தானியங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது.
வைகை அணை - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்:
தேக்கடி, சுருளி அருவி, கொடைக்கானல், மதுரை, திண்டுக்கல், மேகமலை, கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, குரங்கணி ஆகிய சுற்றுலா தளங்கள் வைகை அணைக்கு அருகே அமைத்துள்ளது.
வைகை அணை - பார்வையிடும் நேரம்:
வைகை அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனைத்து வார நாட்களிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.