வெடிச்சு கொட்ட போகுது கனமழை.. தென்தமிழகம் உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை கொட்டும்
சென்னை: தென்தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் சென்னையை மிக்ஜாம் புயல் மொத்தமாகப் புரட்டிப்போட்டது. இரண்டு நாட்களுக்கு கேப் விடாமல் பெய்த கனமழையால், நகரின் முக்கிய பகுதிகள் அனைத்தும் மூழ்கியது.

அதன் பிறகு தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளால் மழை கட்டுக்குள் வந்தது. இப்போது அதே மழை தென்தமிழகத்தில் கொட்டி வருகிறது. தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
அடுத்த 3 மணி நேரம்: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை மழையை போல தென்தமிழகத்தில் 2 நாளுக்கு அடித்து நொறுக்கும் மழை- வெதர்மேன் பரபர! எப்போது நிற்கும்
இந்த மழையால் அங்கே சில இடங்களில் நீர் தேங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சாலைகளில் நீர் தேங்கவும், இதனால் அங்கே போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லேசானா மழை: இது தவிர கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, பாண்டிச்சேரியில் சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ""குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இன்று (டிச.17) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை மையம்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும்.
அதேபோல நாளை (டிச.18) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசியின் சில பகுதிகளில் கனமழை கொட்டும் நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் வரை மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனால் அங்கே தாழ்வான பகுதிகளில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தமிழ்நாடு வெதர்மேனும் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications