வானிலை மையம் கொடுத்த ‘அலெர்ட்’! அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 23 மாவட்டங்களில் இடியுடன் மழை வெளுக்கும்!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி வட மாவட்டங்களில் விடாமல் பெய்த திடீர் மழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது.

இந்நிலையில் வரும் ஜூன் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணப்படுகிறது.
இதனால் ஜூன் 25, 26 ஆகிய நாட்களில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். ஜூன் 27 முதல் 29 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரை சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாக வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தருமபுரி, வேலூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், விருதுநகர், கன்னியாகுமர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications