வரலாறு காணாத பெருவெள்ளம்: திருநெல்வேலி, தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி!
தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
குமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெருமழை வெள்ளம் ஏற்பட்டது. 100 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட இப்பெரு மழை வெள்ளம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வரை பல நூறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழ்நாடு அரசுடன் முப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். ஏற்கனவே மத்திய அரசின் குழுவினர் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில் தென் தமிழ்நாடு மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு சில இடங்களில் வெள்ளத்தில் உடல்கள் மிதந்தபடி வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் மழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேரும் வீடு இடிந்து 2 பேரும் மின்சாரம் தாக்கி 2 பேரும் என மொத்தம் 20 பேர் பலியாகி இருக்கின்றனர்.

திருநெல்வேலியில் நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி- நெல்லை மாவட்டங்களில் தற்போதைய நிலவரப்படி ரூ5,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. விளைநில பாதிப்பு, மீனவர் படகுகள் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு, உயிர் பலி உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு வருகிறது. அனைத்து விவரங்களும் விரைவில் விரிவாக அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 40 பகுதிகளுக்கு இன்னமும் செல்ல முடியாத நிலைமை தொடருகிறது. தற்போது 10 ஹெலிகாப்டர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட 400க்கும் மேற்பட்டோர் மீட்பு, வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 3 கம்பெனி ராணுவத்தினரும் களத்தில் இறங்கி உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications