கொட்டப்போகும் மழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
சென்னை:மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதேபோல கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவிலும் பருவமழை குறைந்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர் வரத்து குறைந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருந்தது. அதேபோல இந்த மாதம் தொடக்கம் முதல் பருவமழையின் அளவு அதிகமாக இருந்தது.
இப்படி இருக்கையில் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக இன்று முதல் அக்.3ம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அடுத்த 3-4 நாட்களுக்கு ஒடிசாவுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடலிலும் இதேபோன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றிருக்கிறது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம், பத்தினம்திட்டா என 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications