சென்னையை ஒட்டி நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி! வட மாநிலங்களுக்கு இன்று சம்பவம் இருக்கு
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்திருக்கிறது. இது தற்போது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நிலைக்கொண்டிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நவ.11ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, அன்றைய தினம் மதியம் 14.30 மணி அளவில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, நவ.12ம் தேதி காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது மெல்ல வடமேற்கு பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது வடதமிழகம், தெற் ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

எனவே வட தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. கொள்ளிடத்தில் 13.4 செ.மீ, தரங்கம்பாடியில் 5.9 செ.மீ, செம்பனார் கோவிலில் 4 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக மயிலாடுமுறை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடலூரில் இன்று கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை நேற்றிரவு பல இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்தாலும், இன்று காலை மழை இல்லை. மறுபுறம் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 1812 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.
மழையின் காரணமாக 100 கன அடி நீரும், கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக 315 கன அடி நீர் என மொத்தமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 415 கன அடி நீர் வரத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழக கடரோல பகுதியை ஒட்டி நிலை கொண்டிருப்பதால், சென்னை உட்பட வட தமிழக கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications