இந்தாண்டு வேற லெவல் சம்பவம் வெயிட்டிங்.. பருவமழை இயல்பை விட அதிகமாகவே கொட்ட போகுது.. வானிலை மையம்
டெல்லி: நாடு முழுக்க வரும் மே 30ஆம் தேதி முதல் வெப்பம் படிப்படியாகக் குறையும் என்றும் இந்தாண்டு பருவமழை இயல்பை விடக் கூடுதலாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாகவே இருந்துள்ளது. குறிப்பாக மார்ச் ஏப்ரல் மாதத்திலேயே தமிழகம் தொடங்கி பல்வேறு இடங்களிலும் வெப்பம் உச்சம் தொட்டது.

கோடை வெப்பம்: மே மாதம் கூட முதல் வாரம் வெப்பம் அதிகமாக இருந்தது. அதன் பின்னரே மாநிலத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், வெப்பமும் கணிசமாகக் குறைந்தது. இப்போது மழை குறைந்துவிட்ட நிலையில், மீண்டும் வெயில் அதிகரித்துவிட்டது. சென்னை உட்படப் பல பகுதிகளில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. வட இந்தியப் பகுதிகளில் இதை விட மிக மோசமாக வெப்பம் இருக்கிறது.
இதற்கிடையே நாட்டில் நிலவும் வெப்ப அலை சில நாட்களில் முடிவடையும் என்றும் நாட்டில் விரைவில் பருவமழை தொடங்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.
106% மழை: இது தொடர்பாக மொஹபத்ரா மேலும் கூறுகையில், "இந்தாண்டு நாடு முழுவதிலும் தென்மேற்கு பருவமழை இயல்வை விட அதிகமாகப் பெய்யும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 106% வரை பெய்யும். இந்தாண்டு நாடு முழுவதும் இயல்பை விட மழை அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இந்த பருவமழையானது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.சாதகமான லா நினா நிலை நிலவுவதால் இந்தாண்டு இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெப்பம் எப்போது குறையும்: நாடு முழுக்க இப்போது கடுமையான வெப்ப அலை நிலவி வரும் நிலையில், வரும் மே 30ஆம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் வெப்பம் படிப்படியாகக் குறையும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.. ஆனால், அதற்கு முன்பு அடுத்த மூன்று நாட்களுக்கு வடமேற்கு இந்தியாவில் கடுமையான வெப்ப அலை இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சொன்ன மாதிரியே மிரட்டிய ரெமல்.. இனி தமிழகத்துக்கு மழையும் இருக்கு - வெயிலும் இருக்கு! இதென்ன புதுஸா
குறிப்பாக டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொடும் என்றும் 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வரை செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கதேசத்தில் நேற்று இரவு ரெமல் புயல் கரையைக் கடந்தது. இதனால் கடலோர மேற்கு வங்கத்தில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல வடகிழக்கு பகுதியில் நாளை வரை மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்: முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நேற்று (26.05.2024) வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த 'ரீமல்’ புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து, நள்ளிரவு (26.05.2024) 2230 மணி – (27.05.2024) 0030 மணி அளவில் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர்தீவிற்கும் (மேற்கு வங்காளம்), கேப்புப்பாராவிற்கும் (வங்கதேசம்) இடையே கரையைக் கடந்தது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு / மேற்கு திசை காற்று நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் மே 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications