சென்னையில் அடித்து கொட்டிய கனமழை! 2ஆவது நாளாக விமான சேவை பாதிப்பு! எத்தனை விமானங்கள் தெரியுமா?
சென்னை: சென்னையில் சூறைக்காற்றுடன் நேற்று இரவும் பெய்த கனமழையால் இன்று 2ஆவது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் நேற்று முன் தினமும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்திலேயே வட்டமடித்தன.
தமிழகத்தில் வெப்பம் தணிந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தலைநகரிலேயே குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பெரும்பாலான மக்கள் சுற்றுலா செல்லவில்லை. இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முன் தினம் நள்ளிரவு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. துபாயிலிருந்து 262 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், 314 பயணிகளுடன் தோகாவிலிரு்து வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், அபுதாபியில் இருந்து 248 பயணிகளுடன் வந்த எத்தியார்ட் ஏர்லைன்ஸ் விமானம், லண்டனில் இருந்து 368 பயணிகளுடன் வந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம், புனேவில் இருந்து 140 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பிராங்பார்ட்டிலிருந்து சென்னை வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
இதையடுத்து துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மற்ற விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மழை நின்றதும் அந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், பிராங்பார்ட், அபுதாபி, சார்ஜா, தோகா, துபாய், டெல்லி, அகமதாபாத் வரை செல்லும் 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னை விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த, இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 15 விமான சேவைகள் பாதிப்படைந்ததையடுத்து பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது. சூறை காற்று இடி மின்னலுடன் இந்த மழை பெய்தது. கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம், அரும்பாக்கம், முகப்பேர், அண்ணாநகர், திருவொற்றியூர், ராயபுரம் காசிமேடு, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், திரு.வி.க. நகர் மற்றும் புறநகர் பகுதியான மணலி, எண்ணூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.
சுமார் 3 மணி நேரத்திற்கு இந்த மழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில் 2ஆவது நாளாக 26 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்த 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. 14 விமானங்கள் சென்னையிலிருந்து தாமதமாக புறப்பட்டுச் சென்றன. கோழிக்கோடு, டெல்லியிலிருந்து வந்த விமானங்கள் முறையே திருச்சி, பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications