மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலா பயணிகளுக்கு தடை
தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தடையை மீறி குற்றால அருவிக்குள் போகாதவாறு போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகாவில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் அணைகள், கபினி உள்ளிட்டவை நிரம்பி வழிந்தன.

இதனால் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டு ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டமும் 107 க்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் குற்றாலத்தில் சீசன் மிகவும் நன்றாக உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்றும் வேகமாக வீசி இருக்கிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் பல்வேறு வாகனங்களில் குற்றாலத்தில் குவிந்தனர். இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மெயின் அருவியில் பகல் 12 மணிக்கு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மெயின் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் தண்ணீர் சீராக விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
ஐந்தருவியில் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிப்பதற்கு போலீஸார் அனுமதித்தனர். நேற்று இரவிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீஸார் வெளியேற்றினர். தொடர்ந்து அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications