வெயில் அடிக்குதேனு ஏமாந்துடாதீங்க.. சென்னை+10 மாவட்டங்களுக்கு மதியம் 1 மணிவரை கனமழை எச்சரிக்கை!
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாலும், வடதமிழகத்தை ஒட்டி நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. இன்று காலை முதல் சென்னையில் மழை இல்லை என்றாலும், மதியம் 1 மணி வரை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் வந்துவிட்டாலே சென்னை மக்களுக்கு மழை குறித்த அச்சம் அதிகரித்துவிடும். அந்த வகையில் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பருவமழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இப்படி இருக்கையில் இரு தினங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வட தமிழகத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இதனால் மழைப்பொழிவு அதிகரித்திருக்கிறது.

இம்மழை இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காற்றழுத்த தாழ்வு மையம் தீவிரமடையாது என்பதால் மழையின் தாக்கமும் தீவிரமாக இருக்காது என்பது ஆறுதலான செய்தியாக இருக்கிறது. இன்றைய வானிலையை பொறுத்தவரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது மதியம் 1 மணிவரை சென்னை உட்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு+மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மதியம் 1 மணி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications